For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகமே எழவு வீடாகி விட்டது-பாரதிராஜா

By Staff
Google Oneindia Tamil News

Bharathiraja
சென்னை: இலங்கையில் நடைபெற்று வரும் போரால் தமிழகமே எழவு வீடாகியுள்ளது. இங்கு வந்து பாயாசம் கேட்கிறார் சோனியா காந்தி. இலங்கையில் போரை நிறுத்தா விட்டால், இனி அவரால் தமிழகத்திற்குள் நுழையவே முடியாது என்று ஆவேசமாக கூறியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

சென்னையில் நடந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தின்போது பாரதிராஜா பேசினார்.

நரியின் குணத்துடன் சோனியா...

அப்போது அவர் கூறுகையில், ஒரு நரியின் குணத்துடன் தமிழ் இனத்தை வஞ்சம் தீர்க்க வேண்டும் என்பதற்காக இலங்கையில் சோனியா காந்திதான் போரை நடத்திக்கொண்டிருக்கிறார். லட்சக்கணக்கான தமிழர்கள் அங்கு கொன்று குவிக்கப்படுகின்றனர்.

லட்சக்கணக்கான பெண்கள் தாலியை இழக்கின்றனர். ஹிட்லர் காலத்தில் நடந்ததைவிட மிக மோசமான இனப்படுகொலை இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமையை உலகமே தட்டிக் கேட்கிறது. ஆனால் இலங்கைத் தமிழர்களின் ஒப்பாரி ஓலம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்றுவரை கேட்கவில்லை.

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்காக சோனியா காந்தி இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. இலங்கையில் போரை நடத்துவதே சோனியா காந்தி என்பதால்தான் அவர் தமிழர்களின் சாவுக்கு இரங்கல் தெரிவிக்க மறுக்கிறார்.

இலங்கைத் தமிழர் படுகொலைக்குத் துணை நிற்கும் சோனியாவைக் கண்டித்து நாங்கள் ஜனநாயக வழியில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்துகிறோம். ஆனால், சோனியா காந்தியோ கொல்லைப்புறம் வழியாக ஹெலிகாப்டர் மூலம் தீவுத்திடலுக்குச் செல்கிறார்.

காலடி வைக்க முடியாது...

இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. இலங்கையில் மீதமுள்ள தமிழர்களைப் பாதுகாப்பதற்காக அங்கு உடனடியாகப் போர்நிறுத்தம் செய்ய சோனியா நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர் இனி எக்காலத்திற்கும் தமிழகத்திற்குள் காலடி எடுத்து வைக்க முடியாது.

இலங்கையில் நடைபெற்று வரும் போரால் தமிழகம் எழவு வீடாக மாறிவிட்டது. ஆனால் இங்கு பாயாசம் கேட்பதற்காக சோனியா காந்தி வருகிறார். அவர் உடனடியாகத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று அவர் ஆவேசமாக கூறினார்.

பிரபாகரனை நெருங்க முடியாது...

காரைக்குடியில் நடந்த கூட்டத்தில் இயக்குனர் பாரதிராஜா பேசுகையில்,

இலங்கையில், தமிழர்களை காக்க தடைகளை தாண்டி லட்சம் இளைஞர்கள் புறப்பட தயாராக உள்ளனர். காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. தமிழ் இனத்திற்கு துரோகம் செய்தால் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சியை எதிர்க்க தயங்க மாட்டோம்.

காங்கிரஸ் ஆட்சியில் தான் இலங்கைக்கு ராணுவ, பொருளாதார உதவிகள் செய்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இலங்கை ராணுவம் மட்டுமின்றி உலக நாடுகளே வந்தாலும் பிரபாகரனை நெருங்க முடியாது. தனி ஈழம் ஏற்பட உறுதி எடுக்க வேண்டும். தனி ஈழம் அமைப்போம் என்றார் பாரதிராஜா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X