தமிழகத்தில் போலீசுக்கு புகார் கொடுக்க புதிய வசதி
சென்னை: தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தும் காவல்துறைக்கு புகார் கொடுக்க மூன்று எண்களை கொண்ட தானியங்கி கம்ப்யூட்டர்-தொலைபேசி மையம் சென்னையில் துவக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை டிஜிபி அலுவலக செய்தி குறிப்பு:
சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை பதிவு செய்யும் சேவை துவக்கப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் இயங்கும் தானியங்கி கம்ப்யூட்டர்-தொலைபேசி நிறுவப்பட்டுள்ளது.
இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் மக்கள் 044 28447200 என்ற பிஎஸ்என்எல் தொலைபேசி எண் அல்லது 044 64555100 மற்றும் 64556100 என்ற இரண்டு டாடா இண்டிகாம் தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம். இந்த மூன்று எண்களும் பிரத்யேகமாக இந்த சேவைக்காக பயன்படுத்தப்பட இருக்கின்றன.
இந்த மூன்று எண்களையும் தவிர்த்து நேரடி அவசர உதவிக்கு எப்போதும் போல் 100 என்ற தொலைபேசி எண்ணையும் பயன்படுத்தலாம்
தமிழ்நாட்டின் எந்தப்பகுதியில் இருக்கும் மக்களும், தங்களது புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்க எந்த நேரத்திலும் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். மற்ற மாநிலத்தில் உள்ள பொதுமக்களும் இச்சேவையை பயன்படுத்தி உதவி பெறலாம்.
இந்த தானியங்கி கம்ப்யூட்டர்-தொலைபேசியில் பதிவு செய்யப்படும் புகார்கள் அல்லது குறைகள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்குவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.