விருதுநகரில் கோடிகளை கொட்டுகிறது காங்.-வைகோ
சிவகாசி: விருதுநகரில் காங்கிரஸ் கட்சி ஓட்டுக்களை பெற வாக்காளர்களுக்கு கோடி, கோடியாக பணத்தை வாரி இறைத்து வருகிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
விருதுநகர் கொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று சிவகாசியில் நடந்த இறுதிகட்ட பிரசாரத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
இலங்கை ராணுவம் பயங்கர ஆயுதங்களை இனி பயன்படுத்தக் கூடாது, ராஜிவ் ஒப்பந்தத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சோனியா பேசியுள்ளார். தேர்தலுக்கு பின் காங்கிரஸ் ஆட்சி மாறி வேறு அரசு அமைந்து விடும் என்ற எண்ணத்தில் தான் ராஜபக்சே அரசு 14, 15, 16 தேதிகளில் தமிழர்களை கொன்று குவிக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கு முன் நடத்த தேர்தல்களைப் போல இன்றி, தற்போது கோடி, கோடியாக பணத்தை செலவழித்து ஓட்டுக்களை பெற காங்கிரஸ் கட்சியும், திமுகவும் முயற்சி செய்கின்றனர்.
விருதுநகர் தொகுதியில் காங்கிரசார் ரூ.50 கோடி செலவில் 80 சதவீத வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர். பணம் கொடுத்தவர்களை பிடித்து கொடுத்தால் அவர்கள் மீதே காவல்துறை வழக்கு போடுகிறது. வாக்காளர்கள் என்னும் நீதிபதிகளை விலைக்கு வாங்க முயற்சி நடக்கிறது.
நான் வெற்றி பெற்றால் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் ஒரு அலுவலகம், விருதுநகரில் மத்திய அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுப்பேன்.
அனைத்து நோய்களுக்கும் இலவச மருத்துவ முகாம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடத்துவேன். பட்டாசு தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாப்பேன். ஓட்டுச் சாவடியில் ஏஜென்ட்டுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கராணம், சில அதிகாரிகள் திருமங்கலத்தில் முறைகேடு செய்து போல செய்ய முயற்சி செய்வார்கள்.
எலக்ட்ரானிக் ஓட்டு பதிவில் முறைகேடு நடக்கலாம் என கருதி தான் அமெரிக்காவில் எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவை ஏற்கவில்லை என்றார்.