மத்தியில் காங். அல்லாத அரசு அமையும்: வைகோ

தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் இன்று காலை 7.15 மணிக்கு தம்பி ரவிச்சந்திரன், மகன் வையாபுரி ஆகியோரோடு வரிசையில் நின்று வாக்களித்தார் வைகோ பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,
திருமங்கலம் இடைத் தேர்தலில் வீட்டுக்கு வீடு பணம் வழங்கப்பட்டு ஜனநாயகம் அழிக்கப்பட்டது. அதைப்போல இந்தப் பொதுத் தேர்தலில் நடக்காது என எதிர்பார்த்தோம்.
ஆனால் திமுக-காங்கிரஸ் கூட்டணியினர் ஒரு தொகுதிக்கு ரூ. 50 கோடி முதல் ரூ.100 கோடி வரை செலவு செய்துள்ளனர். தேர்தலில் திமுக பிரசாரத்தை நம்பி இறங்கவில்லை, பணத்தை நம்பியே இறுங்கியுள்ளனர்.
நான் போட்டியிடும் விருதுநகர் தொகுதியில் காங்கிரசுக்குப் பதிலாக திமுகவினர் ஒரு ஓட்டுக்கு ரூ. 500 கொடுத்துள்ளனர். இதனால் பலர் நன்றிக் கடன் செலுத்துவதற்காக, ஓட்டுக்களை திமுகவுக்கு போடுவார்கள். இதனால் எனது வெற்றி உறுதியானாலும், ஓட்டு வித்தியாசம் குறைவாகத் தான் இருக்கும். ஆனால், இதையெல்லாம் தாண்டி அதிமுக கூட்டணி வெற்றி பெறப் போவது நிச்சயம்.
தமிழக மக்கள் கலைஞருக்கு 5 முறை முடிசூட்டி அழகு பார்த்துள்ளனர். ஆனால், அவர் பதிலுக்கு தமிழ் மக்களுக்கு நன்றி காட்டவில்லை. இலங்கையில் வாடும் அப்பாவி தமிழர்களின் துயர் துடைக்க எதுவும் செய்யவில்லை.
சோனியா வழங்கிய ரசாயன குண்டுகள், பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்துகிறார்கள். இலங்கையில் போர் பகுதியில் கடந்த 4 நாட்களில் 4,000 பேருக்கும் மேலானோர் பலியாகியுள்ளனர். அவர்களை புதைக்க கூட வழியில்லாமல் அவர்களது உவினர்கள் அங்கு தவித்து வருகின்றனர்.
நேற்றிரவு அங்கு தவிக்கும் பொதுமக்களிடையே தொலைபேசி மூலம் வானொலியில் பேசினேன்.
தேர்தல் முடிவு வெளியாகும் 16ம் தேதியன்று, இலங்கையில் தமிழர்கள் மீது பெரிய அளவில் கோர தாக்குதல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கு காரணம் சோனியா தான். 16ம் தேதிக்குள் பிரபாகரனையும் புலிகளையும் ஒழித்துவிட திட்டம் தீட்டியுள்ளனர். அத்தகைய சம்பவங்கள் எதுவும் நடக்காதபடி இருக்க இயற்கையை பூஜிக்கிறேன்.
தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் அல்லாத எந்த அரசு அமைந்தாலும் மகிழ்ச்சியடைவேன். அதுதான் நடக்கப் போகிறது என்றார் வைகோ
முன்னதாக ஆலம்பட்டியில் உள்ள ஓட்டுச் சாவடிக்கு சென்ற அவர் அங்கு வாக்காளர்கள் சிலருக்கு அடையாள அட்டை இருந்தும், வரிசை எண் குளறுபடியால் ஓட்டுப்போட அனுமதி மறுக்கப்படுவது குறித்து தேர்தல் அதிகாரியிடம் பேசினார்.
இது தேர்தல் அதிகாரிகளின் தவறே தவிர மக்களது தவறல்ல அல்ல. எனவே அவர்கள் ஓட்டுப் போட அனுமதிக்க வேண்டும் என்றார். ஆனால் வைகோவின் கோரிக்கையை அதிகாரிகள் ஏற்கவில்லை.
டி.எஸ்.பியிடம் எகிறிய வைகோ:
விருதுநகர் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு வாக்குச் சாவடியை மதிமுக வேட்பாளரும், பொதுச் செயலாளருமான வைகோ இன்று பார்வையிட்டார்.
அப்போது அங்கு வந்த டி.எஸ்.பி. மாலதி, உங்களது வருகையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியேறுங்கள் என்று கூறினார்.
இதனால் கோபமடைந்த வைகோ, நான் ஒரு வேட்பாளர். வாக்குச் சாவடியை பார்வையிட எனக்கு முழு அதிகாரம் உண்டு என்று கோபமாக கூறினார்.
அத்தோடு நில்லாமல், டி.எஸ்.பியை வெளியில் அழைத்து வந்த அவர், எங்கே டிராபிக் பாதிக்கப்பட்டுள்ளது, காட்டுங்கள் என்றார். மேலும், அந்த இடத்தி்ல தாறுமாறாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களைக் காட்டி இவற்றால்தான் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதை முதலில் ஒழுங்கு செய்யுங்கள் என்று அறிவுரையும் கூறினார். இதையடுத்து டி.எஸ்.பி. மாலதி கப்சிப் என்றாகி விட்டார்.
டி.எஸ்.பியின் செயலால் கோபமடைந்து அதிமுக, மதிமுகவினர் அங்கு திரண்டனர். ஆனால் அவர்களை வைகோ சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தார்.












Click it and Unblock the Notifications