தமிழர் பகுதிகளில் விமானங்கள் மூலம் இந்தியா உணவு வழங்க ஜெ. கோரிக்கை
சென்னை: போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வட இலங்கையில் பரிதவித்து வரும் தமிழ் மக்களுக்கு இந்திய போர் விமானங்கள் மூலம் உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:
இலங்கை ராணுவம் இலங்கை தமிழர்கள் மீதான இனவெறி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. உணவு, குடிநீர் போன்றவை கிடைக்காமல் இலங்கை தமிழர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மருத்துவமனைகளின் மீதும் இலங்கை ராணுவத்தினர் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். பலத்த காயமடைந்த மக்கள் மருத்துவ வசதியின்றி தவிக்கின்றனர்.
இலங்கை அரசின் இந்த இனவெறி தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை, செஞ்சிலுவை சங்கம் ஆகியவை கடுமையாக கண்டித்துள்ளன.
அப்பாவி இலங்கை தமிழர்கள் மீது குண்டுகளை வீசவேண்டாம் என அமெரிக்க அதிபர் கூட இலங்கை அதிபரை வலியுறுத்தியிருக்கிறார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியும், மத்திய அரசும் இலங்கையில் நாங்கள் போர் நிறுத்தம் செய்து விட்டோம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்களே தவிர, தமிழர்கள் மீது அவர்களுக்கு உண்மையான அக்கறை இல்லை.
இலங்கை அதிபரோ யார் சொன்னாலும் போரை நிறுத்தப் போவதில்லை என்று கூறி வருகிறார். போரில் எவ்வளவு தமிழர்கள் மடிந்தார்களோ அதைவிட பல மடங்கு தமிழர்கள் பசியால், பட்டினியால் செத்து மடிவார்கள் என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் விமானத்தில் இருந்து உணவு, தண்ணீர், காய்கறி பொட்டலங்களை போட, இந்திய ராணுவம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications