கொண்டாட்ட தகராறு-அதிமுக பிரமுகர் கொலை
தஞ்சாவூர்: தேர்தல் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் அதிமுக பிரமுகர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து அதிராமபட்டிணத்தில் கடைகள் அடைக்கப்பட்டது. பஸ்கள் ஓடவில்லை.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டிணத்தில் உள்ள பழஞ்செட்டி தெருவில் கனகராஜ் (46), ஜெயசுந்தர் (43), சிவக்குமார் (40) என மூன்று சகோதரர்கள் மளிகை நடத்தி வந்தனர். இவர்களுடன் கடையில் கனகராஜின் மகன் கமல்ராஜூம்(25) உதவி செய்து வருகிறார். இவர்கள் அனைவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக வென்றதை அடுத்து அக்கட்சியின் கவுன்சிலர் இன்பநாதன் என்பவர் அப்பகுதியில் வெடி வெடித்து வெற்றியை உற்சாகமாக கொண்டாடியுள்ளார். அவர்கள் அதிமுக பிரமுகர்களின் கடைக்கு முன்னதாகவும் வந்து வேட்டு போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து திமுகவினருக்கும், கடைசியில் இருந்த கனகராஜ் சகோதரர்கள் மற்றும் அவரது மகனுக்கும் இடையே, தகராறு ஏற்பட்டது.
இந் நிலையில் நேற்று காலை அதிமுக பிரமுகர்களின் கடைக்கு வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று கடையில் இருந்த நான்கு பேரையும் அரிவாளால் வெட்டியது.
இதில் பலத்த காயமடைந்த சகோதரர்கள் நான்கு பேரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஜெயசுந்தரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், போகும் வழியில் அவர் மரணமடைந்தார்.
இதையடுத்து அதிராம்பட்டிணத்தில் பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலை குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications