இடம் பெயர்ந்தோர் முகாமிலிருந்து சிறார்கள் கடத்தல்!
கொழும்பு: மழை விட்டும் தூவானம் விடாத கதையாக, போர் முடிந்து விட்டதாக இலங்கை ராணுவம் கூறியுள்ள போதிலும், இடம் பெயர்ந்து முகாம்களில் வசிக்கும் தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகியுளளனர். இப்போது அங்குள்ள தமிழ் மக்களின் குழந்தைகளை கடத்தத் தொடங்கியிருக்கிறார்களாம்.
போர்ப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வந்து பல்வேறு முகாம்களில் கிட்டத்தட்ட 3 லட்சம் தமிழ் மக்கள் தங்கியுள்ளனர். இந்த முகாம்களில் இப்போது சிறார் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
வவுனியா பகுதியில் உள்ள முகாம்களிலிருந்து ஏராளமான சிறுவர், சிறுமியர் காணாமல் போயுள்ளனராம். இதுகுறி்த்து ஐ.நா. விசாரிக்க வேண்டும் என அந்த மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சிறார் போராளிகளாக இருந்த பலர்தான் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களை விசாரணை என்ற பெயரில் ராணுவத்தினர் சித்திரவதை முகாம்களுக்குக் கொண்டு போய் வைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், பல சிறார், சிறுமியரும் இதுபோல காணாமல் போயுள்ளனர். அவர்கள் எங்கு இருக்கின்றனர், என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் பெரும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து மனித உரிமை அமைப்புகளின் சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் சாருலதா ஹாக் கூறுகையில், இந்த கடத்தலுக்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்கவே இந்த கடத்தல் நடைபெறுவதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.
தற்போது ஆயிரக்கணக்கான சிறார்கள், இந்த முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்கள் பலரையும் காணவில்லை.
கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர், பிளாட், இபிடிபி ஆகிய முன்னாள் போராளி குழுக்களைச் சேர்ந்தவர்கள் படு சுதந்திரமாக முகாம்களுக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் எதற்காக சுதந்திரமாக உள்ளே வர அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது தெரியவில்லை.
இவர்கள்தான் குழந்தைகளைக் கடத்துகின்றனரோ என்ற சந்தேகமும் எழுகிறது. சில பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல்கள் வருவதாகவும் எங்களுக்குத் தகவல் வந்துள்ளது.
சில தாய்மார்கள் பிள்ளைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பதற்காக நகைகளைக் கொடுத்து குழந்தைகளை வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன என்று அவர் கூறினார்.
ஆனால் இதை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா மறுத்துள்ளார். இது நடக்க வாய்ப்பே இல்லை. முகாமிலிருந்து உரிய அனுமதி இல்லாமல் யாரையும் வெளியே அழைத்துச் செல்ல முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications