'திமுக': பிரதமர்-சோனியா நீண்ட நேர ஆலோசனை!
நாங்கள் எங்களுக்கு கடந்த முறை தரப்பட்ட பழைய அமைச்சர் பதவிகளையே கேட்டோம், ஆனால், அதை காங்கிரஸ் தர மறுக்கிறது. அதற்குப் பதிலாக காங்கிரஸ் புதிய பார்முலாவை சொல்கிறது. அது எங்களுக்கு ஏற்கத்தக்கதாக இல்லை, கூட்டணிக்கு வெளியில் இருந்தே ஆதரவு என்று கூறிவிட்டு திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி சென்னைக்கு கிளம்பிவி்ட்டார்.
இதையடுத்து 7, ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங்கின் வீட்டுக்கு இன்று காலை 10.30 மணிக்கு சோனியா வந்தார். குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்களும் வந்தனர். அனைவரும் திமுக விவகாரம் குறித்து ஆலோசித்தனர். பின்னர் பகல் 12.30 மணிக்குத் தான் சோனியா அங்கிருந்து திரும்பினார்.
நேற்று இரவு 11 மணிக்கும் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பிரச்சனையைத் தீர்க்க சோனியா முயன்றதும், அதையடுத்து பிரதமரும், சோனியாவும் கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசியதும் நினைவுகூறத்தக்கது.
இதற்கிடையே விரைவிலேயே தனது நிலையில் இருந்து திமுகவும் இறங்கி வரும் என்று கூறப்படுகிறது. முன்பு கோரிய பதவிகளி்ல் சிலவற்றை விட்டுத் தரவும் முன் வரும் என்று தெரிகிறது.