காதலித்த தங்கையை கொன்ற அண்ணன் சரண்
நெல்லை: காதலில் ஈடுபட்ட தங்கையை கொலை செய்தார் அண்ணன். பின்னர் போலீஸில் அவர் சரணடைந்தார்.
நெல்லையை அடுத்த மேலபாலமடையை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஆறுமுககனி. இவர் பேட்டை ராணி அண்ணா கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
ஆறுமுக கனிக்கும் கட்டாம்புளியை சேர்ந்த ராமு என்ற வாலிபருக்கும் இடையே காதல் இருந்ததாக தெரிகிறது. இவர்களது காதலுக்கு ஆறுமுக கனி வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் ஆறுமுக கனியின் தாய் டவுனில் உள்ள தனது அக்காள் மகள் சபாபதி வீட்டில் ஆறுமுக கனியை கொண்டு விட்டார். சபாபதியின் கணவர் சரவணன் டவுனில் ஒரு பள்ளியில் காவலாளியாக உள்ளார்.
சிறிது நாட்கள் ஆறுமுக கனி சபாபதியின் வீட்டில் இருந்தார். சில நாட்களுக்கு முன்பு பழைய பேட்டையில் உள்ள ஆறுமுக கனியின் அண்ணன் ராஜசேகர் சபாபதி வீட்டுக்கு வந்தார். அவர் தனது வீட்டிற்கு ஆறுமுக கனியை கூட்டி சென்றார். இதன்பிறகு ஆறுமுக கனியை காணவில்லை.
தாய் வீட்டிற்கும் அவர் செல்லவில்லை. பழைய பேட்டையில் உள்ள அண்ணன் வீட்டிற்கும் அவர் போகவில்லை. சபாபதியின் வீட்டிலும் இல்லை.
சந்தேகம் அடைந்த ஆறுமுக கனியின் பெற்றோர் டவுண் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆறுமுக கனியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் தங்கையை தான் தான் கொலை செய்ததாக கூறி ராஜசேகர் நெல்லை கோர்ட்டில் சரணடைந்துள்ளார்.