கிழக்கில் விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் - 3 ராணுவத்தினர் பலி
அம்பாறை: இலங்கையின் கிழக்கில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் மறைந்துள்ள விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
வடக்கில் நடந்த கடும் சண்டைக்குப் பின்னர் அங்கு விடுதலைப் புலிகளின் செயல்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது ராணுவம்.
இருப்பினும் கிழக்கில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு வனப் பகுதியில் விடுதலைப் புலிகள் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு ராணுவத்தினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ராணுவத்தினர் மீது நடந்த இரு வேறு தாக்குதல்களில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு கூறுகையில், கஞ்சிக்குடிச்சாறு வனப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளை தேடியழிக்கும் நடவடிக்கையில் இலங்கைப் படை ஈடுபட்டுள்ளது. சனிக்கிழமை புலிகள் நடத்திய பொறி வெடித் தாக்குதலில் சிக்கி ஒரு வீரர் கொல்லப்பட்டார். ஒருவர் காயமடைந்தார்.
இன்னொரு தாக்குதலில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். இருவர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.