விரைவில் இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம்-கனடா
டெல்லி: இந்தியாவுக்கு அணுசக்தி தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் மூலப்பொருட்கள் வழங்கும் ஒப்பந்தில் கனடா விரைவில் கையெழுத்திட இருப்பதாக அந்நாட்டு வர்த்தக அமைச்சர் ஸ்டாக்வெல் டே தெரிவித்துள்ளார்.
கடந்த 1974ம் ஆண்டு வரை இந்தியாவுக்கு அணுசக்தி பொருட்களை வழங்கி வந்த கனடா, இந்தியா முதன் முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியதை அடுத்து அதை நிறுத்தியது. தற்போது சுமார் 35 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் அதற்கான மூலப்பொருட்களை வழங்க முன்வந்துள்ளது.
இதையடுத்து சில நாடுகள் இந்தியா, தனது அணுஆயுதத்தை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக கூறி வருகின்றன. இந்தியா உள்நாட்டில் கிடைக்கும் அணுசக்தி பொருட்களை வைத்து அணு ஆயுதமும், கனடாவில் இருந்து வரும் பொருட்களை வைத்து மின்சாரமும் தயாரிக்க கூடும் என எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது குறித்து கனடாவின் வர்த்தக அமைச்சர் ஸ்டாக்வெல் டே கூறுகையில், அணுசக்தி பொருட்களை மின்சாரம் போன்ற மக்களுக்கான ஆக்கப்பூர்வ வழியில் பயன்படுத்த இந்தியாவுக்கு உதவ இருக்கிறோம். இதற்கான ஒப்பந்தம் விரைவில் முடிய இருக்கிறது.
கனடா வழங்கும் அணுசக்தி எரிபொருட்களை பயன்படுத்தும் அணு உலைகள் அணு ஆய்வாளர்களால் பரிசோதிக்கப்படும். அதனால் இந்தியா, கனடாவில் இருந்து கிடைக்கும் பொருட்களை ராணுவ பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த முடியாது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அணுசக்தி பொருட்களை இந்தியாவுக்கு கனடா வழங்கும். இதன் மதிப்பு சுமார் ரூ. 6 லட்சத்து 65 ஆயிரம் கோடி வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது என்றார்.
இதை கனடாவுக்கான இந்தியத் தூதர் சசிசேகர் காவே உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், ஒப்பந்தத்துக்கான முன் வரைவை இரு நாடுகளும் பறிமாறி கொண்டன. ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றார்.
கனடாவை தொடர்ந்து தற்போது பல நாடுகளும் இந்தியாவுக்கு அணுசக்தி பொருட்களை வழங்க வரிசையில் வந்து நிற்கின்றன. இதையடுத்து இந்தியாவில் விரைவில் 20 முதல் 25 புதிய அணு உலைகள் நிர்மானிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்தியாவுடன் அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதையடுத்து கனடாவும் இந்த ஒப்பந்தத்துக்கு முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.