தமிழர் முகாம்களுக்கு செல்ல ரெட் கிராஸுக்கு தடை
ஜெனீவா: இலங்கையில் அரசு அமைத்துள்ள சில இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் அகதிகளாக தங்கியுள்ள முகாம்களுக்குச் செல்ல சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
இத்தகவலை ஜெனீவாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜேக்கப் கெல்லன்பெர்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜேக்கப் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து அகதிகள் முகாம்களுக்கும் செஞ்சிலுவைச் சங்கத்தினர் செல்ல அனுமதிக்க வேண்டும் என நாங்கள் இலங்கை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்களின் நிலை குறித்து அறிய ஆர்வமாக உள்ளோம்.
ஆனால் சில முகாம்களுக்கு மட்டுமே செல்ல எங்களுக்கு அனுமதி தந்துள்ளனர். அனைத்து முகாம்களுக்கும் எங்களால் செல்ல முடியவில்லை. சில முகாம்களுக்கு செல்ல தடை விதித்துள்ளது இலங்கை அரசு.
முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோர் காயத்துடன் உள்ளனர். அவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தருவதிலும் சிக்கல் நீடிக்கிறது.
இதுவரை நாங்கள் பார்த்த நாடுகளிலேயே இலங்கையில்தான் நிலைமை மோசமாக உள்ளது. ஈராக், சோமாலியா, ஜார்ஜியா ஆகிய நாடுகளில் கூட எங்களை எளிதில் பணியாற்ற அனுமதித்தனர். ஆனால் இலங்கை அரசு இவ்வாறு செய்து வருவது வருத்தம் தருகிறது, அதிர்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
செஞ்சிலுவைச் சங்கத்தினர் மட்டுமல்லாது, ஐ.நா. உதவிக் குழு, பிற உதவிக் குழுக்களையும் கூட இலங்கை அரசு அகதிகள் முகாம்களுக்கு அனுப்பாமல் தடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 3 லட்சம் தமிழர்கள் அகதிகளாக அரசு அமைத்துள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் மானிக் பார்ம் என்ற முகாமில் ஆடு, மாடுகளைப் போல அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாமின் சில பகுதிகளுக்கு மட்டுமே செல்ல இலங்கை அரசு அனுமதிப்பதாக செஞ்சிலுவைச் சங்க செய்தித் தொடர்பாளர் மார்கல் இசார்ட் கூறியுள்ளார்.
மானிக் பார்ம் முகாமைச் சுற்றிலும் முள் வேலி அமைக்கப்பட்டுள்ளது. உள்ளேயிருந்து வெளியேறவும், வெளியிலிருந்து யாரும் உள்ளே வரவும் தடை விதித்துள்ளது அரசு.












Click it and Unblock the Notifications