தயாளு அம்மாள் வந்த விமானம் தரையிறங்குவதில் சிக்கல்
டெல்லி: டெல்லியில் பதவியேற்பு விழாவுக்கு சென்று திரும்பிய முதல்வர் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாள் வந்த விமானம் பலத்த காற்று வீசியதை அடுத்து 20 நிமிடம் தாமதமாக தரையிறங்கியது.
டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சர்களின் பதவியேற்பு விழாவில் திமுகவை சேர்ந்த அழகிரி, தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் அமைச்சர் பொறுப்பு ஏற்றுகொண்டனர்.
இந்த விழாவை நேரில் காண தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவியும், அழகிரியின் தாயாருமான தயாளு அம்மாள் டெல்லி சென்றிருந்தார். விழா முடிந்த நிலையில் அவர் தமிழக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோருடன் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
மொத்த 100 பேர் பயணம் செய்த அந்த விமானம் நேற்று இரவு 7.35 மணிக்கு சென்னையில் தரையிறங்க இருந்தது. ஆனால், தரையிறங்கும் சமயத்தில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பலத்த காற்று வீசியது. இதையடுத்து விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
பின்னர் 20 நிமிடம் தாமதமாக 7.55 மணிக்கு விமானம் தனது இரண்டாவது முயற்சியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. முக்கிய விஐபிக்கள் வந்த விமானம் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தால் விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications