டியூப் லைட்டால் அடித்து வாலிபர் கொலை-4 பேர் கைது
சென்னை: சென்னை அருகே திருமண வரவேற்பு வீட்டில் நடந்த மோதலில் வாலிபர் ஒருவர் டியூப்லைட்டால் அடித்து கொல்லப்பட்டார். இதையடுத்து போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.
சென்னை அம்பத்தூர் காமராஜபுரம் டவுன்ஷிப் குவார்ட்டர்சை சேர்ந்தவர் நாகராஜன் (21). துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வரும் அவர் தனது நண்பர்கள் ஜான்சன், தேவகுமார், சார்லஸ், திருப்பதி ஆகியோருடன் சமீபத்தில் நடந்த யேசுதாஸ் என்பவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது டிஜிட்டல் பேனர் வைப்பது தொடர்பாக நாகராஜன், அவரது நண்பர்களுக்கும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சாமுவேல் (28), தேவபிரசாத் (26), மோகன்பாபு என்ற குட்டி (31), சாந்தி பிரசன்னா குமார் (35) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இவர்கள் நான்கு பேரும் சகோதரர்கள்.
வாக்குவாதமாக ஆரம்பித்த இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து கைகலப்பானது. அப்போது சாமுவேல் மற்றும் அவரது சகோதரர்கள், நாகராஜன் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியுள்ளனர்.
அப்போது திருமண வரவேற்பு வீட்டில் வைக்கப்பட்டிருந்த டியூப் லைட்டால் நாகராஜனை அடித்துள்ளனர். இதில் டியூப் லைட் ஒன்று உடைந்து நாகராஜனின் கழுத்தில் குத்தியது. இதையடுத்து நாகராஜன் ரத்த சொட்ட சம்பவ இடத்திலே பலியானார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சாமுவேல் மற்றும் அவரது சகோதரர்கள் மூவரையும் கைது செய்தனர்.