நெய்வேலி: ஒப்பந்த ஊழியர் வேலை நிறுத்தம்-மின் உற்பத்தி பாதிக்கப்படும்

நெய்வேலி நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி நிறுவனத்தில் 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம் கோரியும், ஊதிய உயர்வு கோரியும், என்எல்சி மருத்துவமனையில் இலவச மருத்துவ சிகிச்சை வசதி கோரியும், ஊழியர் சொசைட்டியில் இணைக்கக் கோரியும் பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்தத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்போதெல்லாம் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம், என்.எல்.சி. நிர்வாகம் மற்றும் தொழிலாளர் மண்டல ஆணையம் ஆகியோர் இடையே டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி தொழிலாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.750 சம்பள உயர்வு வழங்குவது, இலவச மருத்துவ புத்தகம் வழங்குவது, சீனியாரிட்டி அடிப்படையில் 5,000 ஒப்பந்தத் தொழிலாளர்களை சொசைட்டியில் இணைப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால், 200 பேருக்கு மட்டுமே இலவச மருத்துவ அடையாள அட்டை வழங்கப்பட்டது. மற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.
மேலும் ஒப்பந்தம் ஏற்பட்டு ஒரு ஆண்டு முடிந்துவிட்ட நிலையில் இன்னும் சீனியாரிட்டி பட்டியலே தயாரிக்கப்படவில்லை.
இதையடுத்து ஒப்பந்தத் தொழிலாளர்களில் முதன்மையான சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தின் ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் சிறப்புப் பேரவைக் கூட்டம் நடந்தது.
அதில், வரும் 4ம் தேதி பேரணியாக சென்று கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமை அலுவலகத்தில் கொடுப்பது என்றும், 15ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால் 15ம் தேதி முதல் நெய்வேலி மின் நிலையத்தில் உற்பத்திப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications