Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி புதிய தலைமை!-செல்வராசா பத்மநாதன்

Subscribe to Oneindia Tamil

Selvaraja Padmanathan
சிட்னி: தமிழ் ஈழ மக்களுக்கு புதிய தலைமையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் அறிவித்துள்ளார்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் அவருடன் நான்கு மணிநேரம் பேசியதாகவும் மே 19-ம் தேதி அறிவித்த பத்மநாதன், ஒரு வாரம் கழித்து, 'பிரபாகரன் மே 17-ம் தேதியே கொல்லப்பட்டுவிட்டார்' என்றார். இதனால் சர்வதேச அளவில் தமிழர்கள் குழம்பிப் போய்விட்டனர்.

இந் நிலையில், பத்மநாதன் மீது பல புகார்கள் கூறப்பட்டன. இலங்கை அரசிடம் விலை போய்விட்டார் என்றும், பிரபாகரன் இல்லாத சூழலைப் பயன்படுத்தி இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை கைப்பற்ற முயல்கிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் செல்வராசா பத்மநாதன் ஆஸ்திரேலிய வானொலிக்கு அளித்துள்ள பேட்டி:

இறுதி நாள் யுத்தத்தின்போது, அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், சமாதான செயலகத்தின் புலித்தேவன் ஆகியோர் மரணம் என்னை மிகவும் ஆழமாக பாதித்தது. எமது மக்கள் மிகவும் கொடுமையாக எதிரிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டபோது- ஒவ்வொரு கணமும் எமது உடன்பிறப்புகள் சுட்டு வீழ்த்தப்பட்டபோது- நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இவர்கள் இருவரும் என்னுடன் கலந்துரையாடினார்கள்.

போர் நிறுத்தம்-ஆயுதக் களைவு:

போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசுடன் நாம் பேசினோம். சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரின் மூலம் இலங்கை அதிபரின் ஒப்புதலின்படி- நடேசன், புலித்தேவன் ஆகியோர் ராணுவ முகாமுக்கு சென்று பேசுவற்காக வெள்ளைக் கொடியுடன் சென்று கொண்டிருந்தபோது சிறிலங்கா ராணுவத்தினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள்.

அதேபோன்று பொதுமக்கள் சிலரும் வெள்ளைக் கொடியுடன் சென்றபோது சிறிலங்கா அரசாங்கம் தனது வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு அவர்களை சுட்டுக் கொலை செய்தது. இதுதான் உண்மை.

உண்மையில் சரணடைவது குறித்து 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே இலங்கை தரப்புக்கு சொல்லி விட்டோம்.

முதற்கட்ட நடவடிக்கையாக முக்கிய அமைச்சர் ஒருவரும் எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இரண்டு கத்தோலிக்க ஆயர்களும் அங்கு செல்வதாக இருந்தது. அந்த சம்பவம் ஏதோ காரணத்தினால் நடைபெறாமல் போய்விட்டது.

எனினும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினோம். புலிகளே நேரடியாக வந்து பேசலாம் என்று இலங்கை தரப்பில் எங்களிடம் உறுதியாகக் கூறினார்கள்.

இலங்கை ராணுவத் தளபதிக்கு இந்த தகவல் அறிவிக்கப்பட்டதா? இல்லையா? என்பது எமக்கு தெரியாது. ஆனால் அதிபர் ராஜபக்சே உத்தரவுப்படியே இந்த சரணடைவு நடைபெற்றது என்பதே அப்பட்டமான உண்மை.

இலங்கை தட்டிக்கழித்தது!:

இறுதி நாளில் பல ஆயிரம் மக்கள் கொல்லபடுவதைத் தடுக்க சர்வதேச அளவில் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். ஆனால் பல்வேறு காரணங்களை கூறி அந்த முயற்சிகளை தட்டிக்கழித்துக் கொண்டே வந்தது இலங்கை அரசு.

கடைசித் தருணத்தில் அதாவது, மே 16ம் நாளும், நாங்கள் போர் நிறுத்தம் குறித்து பேசுவதற்கு முயற்சிகள் எடுத்தோம். அவர்கள் அதனையும் தட்டிக் கழித்தனர். உலக நாடுகள் எவ்வளவோ அழுத்தங்களைக் கொடுத்தும் இலங்கை செவி சாய்க்கவில்லை.

தடுப்பு முகாம்களில் நடக்கும் அவலம்...:

தமிழினத்தை ஊனமாக்கும் முயற்சிகளில் இலங்கை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் கைகளில்தான் எமது இனத்தின் தலைவிதி இன்று தங்கியிருக்கின்றது. நாங்கள் ஒரு அரசியல் சுனாமியை சந்தித்து, அந்த அழிவின் வருத்தத்தில் இருக்கிறோம்.
எனவே புலம்பெயர் வாழ் மக்கள் தமது உடன் பிறப்புக்களை காப்பாற்ற வேண்டிய கடமையில் இருக்கிறார்கள்.

புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் உடனடியாக அந்தந்த நாடுகளில் அங்குள்ள சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எந்தவித வன்முறையையும் தொடாமல் போராட்டங்களை மேற்கொண்டு, எமது மக்களுக்கு உதவும்படி அந்த நாடுகளின் அரசுகளை கேட்க வேண்டும். அந்த அரசுகளின் அனுதாபத்தை நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த போராட்டத்திற்கு புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்க முன்வர வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையுடனும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடனும் நாங்கள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம். எமது மக்களுக்குரிய உணவும் மருந்துப் பொருட்களும் சென்றடைய வேண்டும். இந்திய அரசாங்கத்துடனும் தமிழக அரசுடனும் இது குறித்து பேசிக்கொண்டு இருக்கிறோம்.

பிரபாகரன் விட்டுச் சென்ற கடமை...:

எங்கள் தலைவர் விட்டுச்சென்ற கடைமையை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். எனவே, அனைவரும் வேறுபாடுகளை மறந்து முன்வந்து நமது இனத்தைக் காப்பாற்றுங்கள். முள்வேலிகளுக்கு இடையில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் நமது உறவுகளைக் காப்பாற்றுங்கள்.

வெற்றிடத்தை நிரப்பும் முயற்சிகள்...:

இப்போது எங்கள் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள வெறுமையால் பாதிக்கப்பட்டுள்ளோம். உண்மையில் இந்த வெற்றிடம் என்பது எதிர்பாராத நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது. அந்த இடத்தை நிரப்ப நாம் அனைத்து தரப்பினருடனும் குறிப்பாக சகல அரசியல் கட்சிகளுடனும், இயக்கங்களுடனும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மிக விரைவில் அந்த முயற்சி வெற்றிபெறும்.

தமிழ் மக்கள் அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்களைத் தேடி ஐநாவிடம் ஒப்படைக்கும் பணியிலும் தீவிரமாக உள்ளோம். ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளிடமும் இது குறித்த உதவிகளை நான் கேட்டிருக்கிறேன். சில அரசாங்கங்களுடனும் இது குறித்து பேசி வருகின்றேன். முடிந்தவரை அவற்றை வெகுவிரைவில் செய்யவேண்டும் என்று விரும்புகின்றேன்.

ஆனால், அதற்கு முன்னர் எமது மக்கள் பசியால் வாடவோ அன்றி உணவின்றி இறப்பதையோ நாங்கள் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே அவர்கள் பட்ட துன்பம் போதும். இனியாவது அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுங்கள். அதுவே அவர்களை வாழ வைக்கும்.

இலங்கை வெற்றி பெற்றுள்ளது உண்மை...:

இலங்கை அரசு இந்தப் போரில் ஒரு வெற்றியைக் கண்டிருப்பது உண்மை. ஆனால், அவர்கள் சர்வதேச அமைப்புகளை அங்கே அனுமதிக்க தயங்குகின்றனர். தமிழ் மக்களுக்கு நேரடியாக பொருட்கள் அங்கு அனுப்பப்பட முடியாவிட்டாலும் இந்திய அரசாங்கத்துடனும் தமிழக முதல்வருடனும் இது குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம்.

எனவே எந்த வழியில் சென்றாலும் அது மக்களை சென்றடைந்தால் அது போதும் என்றே நான் கருதுகின்றேன்.

உலக நாடுகள் கைவிட்டு விட்டனவா?...

தமிழ் மக்கள் இனப்படுகொலை விஷயத்தில் அனைத்துலக நாடுகள் இலங்கை அரசுக்கு ஓரளவுக்கு அழுத்தமும் கொடுத்திருக்கின்றன. எனினும் சீனா, ரஷ்யா, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆசியுடன் இந்த நாடகத்தை இலங்கை அரசாங்கம் ஆடி முடித்திருக்கிறது.

இந்திய அரசின் கவனத்தை திருப்புவோம்:

இந்திய அரசின் உதவியில்லாமல் எம்மால் எதுவும் செய்ய முடியாது என்பது தெரியும். எனவே இந்திய அரசாங்கத்தின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்பும் உறுதியான நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து அந்த வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். சிறிது கால அவசகாசம் தேவைப்படுகிறது. இது குறித்த விபரங்களை தற்போது வெளிப்படுத்த முடியாது.

ராணுவ முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் எங்கள் மக்களைக் காப்பாற்றுவதற்கும், ராணுவத்திடம் பிடிபட்ட போராளிகளை அனைத்துலக சட்ட அடிப்படையில் விசாரிக்கவும் வழி வகை செய்ய வேண்டும். இதுதான் எங்கள் முதல் பணி.

பிளவுகளை மறந்து அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு குடையின்கீழ் அரசியல் தீர்வுக்காக நிற்க வேண்டும். அதுதான் எனது விருப்பம். அதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் எடுத்து வருகிறேன் என்றார் பத்மநாதன்.

விலை போய்விட்டேனா?

உங்களைப் பற்றிய வதந்திகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்திய உளவு அமைப்பு உங்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கான உங்களது பதில் என்ன? என்ற கேள்விக்கு.

நான் எமது தேசியத் தலைவருடன் நான் முப்பதாம்டுகளுக்கு மேலாக, அவருடன் ஆத்ம ரீதியாக கலந்துகொண்டவன். இதை எமது போராட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் அறிந்து கொள்வர். எமக்கு இடையில் எந்தவித அப்பழுக்கற்ற நட்பை பேணிக் கொண்டோம். இது சாதாரண குடும்ப- மனித- வாழ்க்கைக்கு சற்று மேலான உறவு.

இது போன்ற பேச்சுக்கள், அனைத்துலக ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக என்னை நியமித்த அந்த தலைவருக்கு செய்யப்படும் துரோகமாகத்தான் நான் எண்ணுகின்றேன்.

எமது தலைவர் எமது மக்களின் இதயங்களில் குடிகொண்டவர்.
நான் பணத்திற்காகவோ அல்லது பதவிகளுக்காகவோ விலைபோகக் கூடியவனாக இருந்தால் என்னை அவர் இந்த பொறுப்பில் நியமித்திருக்க மாட்டார்.

'எமது மக்களுக்கு கௌரவமான, சமனான, மரியாதையுடன் வாழக்கூடிய தீர்வை எடுத்துக் கொடுப்பதற்கு எனது வாழக்கையை அர்ப்பணித்திருக்கின்றேன்' என்ற எங்கள் தலைவரின் கனவினை நிறைவேற்றுவோம்.

சிறிலங்கா அரசு தற்போது தொடங்கியுள்ள போரானது அனைத்துலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் கட்டமைப்பை உடைப்பதாகவே உள்ளது. அதுதான் அவர்களின் அடுத்த இலக்கு.

திருமதி ஆன்டன் பாலசிங்கத்தை நாடு கடத்துவதற்கும் அவரை துரோகியாக்குவதற்கும் இலங்கை அரசு முயற்சி எடுத்திருக்கிறது. எனவே அவர்கள் நினைப்பதை செய்வதற்கு தயவு செய்து துணை போகாதீர்கள்...என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+