இலங்கை: ஐ.நாவுக்கு ஆம்னஸ்டி கோரிக்கை
நியூயார்க்: மனிதாபிமானக் குழுக்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும், பத்திரிக்கையாளர்களும், ஐ.நா. குழுக்களையும் முழுமையான அளவில் இலங்கையில் நடமாட, வன்னிப் பகுதிக்குள்ளும், அகதிகள் முகாம்களுக்குள்ளும் செல்ல இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. வலியுறுத்த வேண்டும், நிர்ப்பந்திக்க வேண்டும் என ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கோரியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் ஐ.நா. அலுவலக பிரிவு தலைவர் யுவோன் டெர்லிங்கன் கூறுகையில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட இடம் பெயர்ந்த மக்கள் வசிக்கும் முகாம்களுக்கு செல்ல முழு அளவில் மனிதாபிமான குழுக்களையும், பிறரையும் இலங்கை அரசு நிபந்தனையின்றி அனுமதிக்க வேண்டும் என ஐ.நா.வும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் நிர்ப்பந்திக்க வேண்டும்.
அங்குள்ள மக்களுக்கு உணவு, மருந்து ஆகியவை பெரும் தட்டுப்பாடாக உள்ளது.
ஆனால் அவர்களுக்குரிய நிவாரண உதவிகளை வழங்க ஐ.நா. குழுக்களையோ அல்லது பிற மனிதாபிமான, மனித உரிமை அமைப்புகளையோ அனுமதிக்க இலங்கை அரசு மறுப்பது ஏற்றுக் கொள்ளவே முடியாத செயலாகும்.
இலங்கைக்கு பான் கி மூன் சென்றபோது மனிதாபிமானக் குழுக்களை அனுமதிப்பதாக இலங்கை அரசு அவருக்கு உத்தரவாதம் அளித்தது. ஆனால் அதை அந்த அரசு இப்போது காற்றில் பறக்க விட்டு விட்டது. இதன் மூலம் ஐ.நா. அமைப்பின் மீதான ஒட்டுமொத்த நம்பகத்தன்மையும் தூர்ந்து தகர்ந்து போய்க் கொண்டிருக்கிறது.
எனவே ஐ.நா. குழுக்களையும், பிற மனித உரிமை குழுக்களையும் முழு அளவில் அகதிகள் முகாம்களுக்குள் செல்ல இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபை நிர்ப்பந்தப்படுத்த வேண்டும்.
இதுதவிர அகதிகள் முகாம்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க ஐ.நா. மனித உரிமை கண்காணிப்பாளர்களை அங்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இலங்கை அரசும், விடுதலைப் புலிகள் அமைப்பும் செய்த போர்க் குற்றங்கள் குறித்து முழு அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும்.
அகதிகள் முகாம்களில் பெருமளவில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக எங்களுக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. உதவிக் குழுக்களை அந்தப் பகுதிக்கு செல்ல விடாமல் அரசு தடுத்து வருகிறது என்றார் யுவோன்.












Click it and Unblock the Notifications