மீண்டும் துவங்கியது செங்கோட்டை - கேரளா பஸ் போக்குவரத்து
செங்கோட்டை: செங்கோட்டையில் இருந்து கேரளா மாநிலம் புனலூருக்கு சுமார் 6 மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் பஸ் போக்குவரத்து துவங்கியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 208ல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து கடந்த 6 மாதங்களாக செங்கோட்டையில் இருந்து புனலூருக்கு போக்குவரத்து மூடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி முதல் கேரள பேருந்துகளும், 3ம் தேதி முதல் தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளும் இயங்க தொடங்கியுள்ளன.
தமிழக விரைவு போக்குவரத்து கழகம் பழைய பேருந்துகளை மாற்றி விட்டு புதிய பேருந்துகளை கடந்த நான்கு நாட்களாக சாதாரண கட்டணத்தில் இயக்கி வருகிறது.
கேரள மாநிலம் கொல்லம் செல்லும் பேருந்துகள் செங்கோட்டையிலிருந்து காலை 7 மணி, 9 மணி, மதியம் 3 மணி ஆகிய நேரங்களிலும், சுரண்டை-கொல்லம் பேருந்து செங்கோட்டையிலிருந்து காலை 10 மணிக்கும் இயக்கப்படுகிறது.
இதுதவிர செங்கோட்டையிலிருந்து ஆலப்புழைக்கு காலை 9 மணிக்கும், எர்ணாகுளத்திற்கு காலை 11, இரவு 11.30 மணிக்கும், திருநெல்வேலியிலிருந்து எர்ணாகுளம் காலை 11.30 மணிக்கும், கடையநல்லூர்-திருவனந்தபுரம் காலை 8.30 மணிக்கும், வேளாங்கண்ணி-கொல்லம் மதியம் 12.30 மணிக்கும், சென்னை-பத்தனம்திட்டா காலை 6-30 மணிக்கும், திருச்செந்தூர்-குருவாயூர் இரவு 9 மணிக்கும் இயக்கப்படுகிறது.
இது தவிர கேரள மாநில போக்குவரத்து கழகம் சார்பில் தென்காசியில் இருந்து செங்கோட்டை வழியாக கொல்லம், திருவனந்தபுரம், கோட்டயம், ஆலப்புழா, சங்கனாச்சேரி, பத்தணம்திட்டா ஆகிய இடங்களுக்கும், புதிதாக தென்காசியிலிருந்து தொடுபுழாவிற்கு செங்கோட்டை, கஞ்சிராப்பள்ளி, ஈரோட்டுபேட்டா பலாமார்க்கத்தில் 2 பேரூந்துகளும் இயக்கப்படுகின்றன.
தென்காசி-செங்கோட்டை-கொல்லம் வழியாக காயம்குளத்திற்கு 2 பேருந்துகளும், தென்காசி-செங்கோட்டை-ஆடூர் வழியாக காயம்குளத்திற்கு 2 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இது தவிர தமிழக அரசு போக்குவரத்து கழகம் தூத்துக்குடி-கொல்லம் மார்க்கத்தில் ஒரு பேருந்தை இயக்குகிறது.