போலி மருந்து: இந்தியாவின் பெயரில் சீனா செய்த தில்லுமுல்லு அம்பலம்!
கடந்த பல ஆண்டுகளாகவே, ஆப்பிரிக்க நாடுகளில் போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மருந்துகளில் 'இந்தியாவில் தயாரிக்கப்பட்டது (Made in India)' என்ற முத்திரை அச்சடிக்கப்பட்டிருந்ததால், இதுவரை இந்த படுபாதகத்தை இந்தியாவே செய்து வருவதாக உலக நாடுகள் பல குற்றம் சாட்டி வந்தன.
ஆனால் கடந்த வாரம் நைஜீரியா அரசின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஏஜென்ஸி ஒரு அறிக்கை வெளியிட்டது. இந்த மருந்துகள் அனைத்துமே சீனாவில் தயாரானவைதான் என்றும், அங்கிருந்துதான் இவை ஏற்றுமதியாகி வருகின்றன என்ற உண்மை இப்போது தெரிய வந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் நைஜீரியா அரசு தெரிவித்துள்ளது.
இந்த விஷயத்தில் உடனடியாக தனது கண்டனத்தை சீனாவுக்குத் தெரிவித்துள்ள இந்தியா, சீனாவின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்துடனும் பேச்சு நடத்தியுள்ளது.
மருந்துப் பொருள்களுக்கு நைஜீரியா நாடும் பிற ஆப்ரிக்க நாடுகளில் பெரும்பாலானவையும் முழுக்க முழுக்க வெளிநாடுகளையே நம்பியுள்ளன. இவற்றின் 60 சதவிகித மருந்துப் பொருள் தேவையை நிறைவேற்றுபவை இந்தியாவும் சீனாவும் மட்டுமே. ஆனால் இந்திய - சீன நிறுவனங்கள் தங்களுக்கு தரமான மருந்துகளைத் தருவதில்லை என நைஜீரியா பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வந்தது.
சமீபத்தில் போலி மருந்துகள் சப்ளை செய்ததாக 30 இந்திய மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களை தடைசெய்துவிட்டது நைஜீரியா அரசு.
இந்த நிலையில், மற்ற ஆப்ரிக்க நாடுகள் பலவற்றிலிருந்தும் இந்தியாவின் தயாரிப்பாக வரும் அனைத்து மருந்துகளும் போலியானவையாக உள்ளன என புகார் கூறப்பட்டது. உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் பெயரைக் கெடுக்கவும், சர்வதேச வர்த்தகத்தை முடக்கவும் சில நாடுகள் சதி செய்வதாக இந்தியா புகார் கூறி வந்தது.
இந்த நிலையில் நைஜீரியா அரசு அமைப்பே, இந்த மருந்துகளைத் தயாரித்து அனுப்பியது சீனாவே என்றும், அதில் வேண்டுமென்றே இந்தியாவின் லேபிளை ஒட்டி சதி செய்திருப்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது.
இந்த விவரங்களை உடனடியாக உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) போன்றவற்றிடமும் சமர்ப்பித்துள்ளது இந்தியா.