தகவல் அறியும் சட்டம்-இழுத்தடிக்கும் அம்பத்தூர் நகராட்சி
சென்னை: தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு செய்து சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலான நிலையில் தாங்கள் கேட்ட தகவல்களை கொடுக்காமல் அம்பத்தூர் நகராட்சி இழுத்தடிக்கிறது என கொரட்டூர் மக்கள் குறை தெரிவித்துள்ளனர்.
சென்னையை அடுத்து கொரட்டூர் பகுதியில் சமீபத்தில் ரூ. 10 லட்சம் செலவில் வடக்கு கால்வாய் சீரமைப்பு பணி நடக்கும் என பத்திரிகைகளில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் செய்தி வெளிவந்தது.
ஆனால், அதன் பின்னர் பல மாதங்கள் கடந்த பின்னும் அப்பகுதியில் எந்த பணியும் நடப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவி்ல்லை. இதையடுத்து அம்பத்தூர் நகராட்சிக்கு இது தொடர்பாக பாரதி கலாசார மற்றும் நலச் சங்கம் என்ற அமைப்பு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இரண்டு மாதங்களுக்கு மனு செய்திருந்தது.
மனுவில், வடக்கு கால்வாயை சீரமைக்கப்பட்டதா... அதற்கான செலவு எவ்வளவு என கேட்கப்பட்டிருந்தது. இதற்கு தற்போது வரை அம்பத்தூர் நகராட்சி உரிய பதில் எதையும் அளிக்கவில்லை.
தகவல் அறியும் உரிமை சட்டப்படி மக்கள் கேட்கும் தகவல்களை 30 நாட்களுக்குள் அளிக்க வேண்டும். ஆனால் அம்பத்தூர் நகராட்சி இந்த சாதாரண விதியை கூட கடைபிடிக்க தவறிவிட்டனர்.
இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அம்பத்தூர் நகராட்சி இந்த விஷயத்தில் தொடர்ந்து மெளமாமனாக இருப்பதற்கு பொது மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.