கான்பூர் கல்லூரிகளில் ஜீன்ஸுக்கு தடை
கான்பூர்: கான்பூரில் இருக்கும் கல்லூரிகள் மாணவிகள் ஜீன்ஸ் அணிந்து வர தடை விதித்துள்ளன. மேலும், மொபைல் போனுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கான்பூர் பல்கலைக்கழகத்தின் கட்டுபாட்டில் இருக்கும் தயானந்த் பெண்கள் கல்லூரி தான் தற்போது இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. கல்லூரி கேம்பசுக்குள் மேற்கத்திய ஆடைகளை அணிவதை தடை செய்துள்ளது.
இது தொடர்பான சுற்றிக்கையை ஒன்றை இந்த ஆண்டு கல்லூரி துவங்குவதற்கு சில நாட்கள் முன்னதாகவே அறிவித்துவிட்டது.
கான்பூரில் உள்ள ஜிகாரி தேவி கல்லூரி, எஸ்என் சென் கல்லூரி, ஆச்சார்யா நரேந்திர தேவ் கல்லூரி ஆகியவை இந்த உடை கட்டுப்பாட்டை ஏற்கனவே அமலில் வைத்துள்ளன.
இது குறித்து தயானந்த் பெண்கள் கல்லூரியின் முதல்வர் மீதா ஜமால் கூறுகையில்,
ஈவ் டீசிங்கை தடுப்பதற்காக இந்த முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய உடைகளான உடலை ஒட்டி நிற்கும் டி-சர்ட்டுகள், உடலை இறுக்கும் அளவுக்கான ஜீன்ஸ்கள் போன்றவற்றை அணிய தடை விதித்துள்ளோம்.
இது போன்ற உடைகள் அணிவதால் ஒழுக்கம் கெட்டு விடுகிறது. இந்த உடைகளால் மற்றவர்களின் விமர்சனங்களை சந்திக்க வேண்டியுள்ளது. சில சமயங்களில் இது ஈவ் டீசிங்காக மாறுகிறது.
மாணவிகளின் நலனை காப்பது எங்களின் முக்கிய நோக்கம். இந்த உடை கட்டுப்பாடு முற்றிலுமாக ஈவ் டீசிங்கை அழித்துவிடாது என்றாலும், அதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். எந்த உடை அணிவது என அவர்கள் நேரத்தை வீணாக்குவதையும் தடுக்க முடியும் என்றார்.
ஆனால், இதற்கு மாணவிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து மாணவி ஒருவர் கூறுகையில், கல்லூரி நிர்வாகத்தின் முடிவு கண்டிக்கதக்கது. அவர்கள் ஈவ் டீசிங்கை தடுக்க நினைத்தால் காவல் நிலைய்த்துக்கு செல்ல வேண்டும். மாணவர்களை தண்டிக்க கூடாது என்றார்.
மற்றொரு மாணவி கூறுகையில், இறுக்கமான டி-சர்ட்டுகள், டாங் டாப்ஸ் அணிவது கூடாது என்ற நிர்வாகத்தின் கட்டுபாட்டை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், ஜீன்ஸ் அணிய கூடாது என்றால் எப்படி? என்றார்.