பிறந்த நாளில் லாலுவின் பாஸை ரத்து செய்த மம்தா!
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் பிறந்த நாளன்று, அவருக்கு வழங்கப்பட்டிருந்த வாழ்நாள் முழுவதும் ஓசியில் ரயிலில் பயணம் செய்வதற்கான கோல்டன் பாஸை ரத்து செய்து உத்தரவிட்டார் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி.
லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக வலம் வந்தவர். இந்திய ரயில்வேயை லாபம் தரும் துறையாக மாற்றி அனைவரையும் வியக்க வைத்தார்.
ராஜா போல வலம் வந்த லாலுவை பீகார் மக்கள் தேர்தலில் நெத்தி அடி கொடுத்து உட்கார வைத்து விட்டனர். இதனால் எதுவும் செய்ய முடியாமல் செயலிழந்து போயிருக்கிறார் லாலு.
அவர் மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவதற்கு 3 நாட்ளுக்கு முன்பு சூப்பரான ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, முன்னாள் ரயில்வே அமைச்சர்கள் தங்களது வாழ் நாள் முழுவதும் ஓசியில், நாடு முழுவதும் ஏசி பெட்டியில் உலா வரலாம் என்பதுதான் அந்தத் திட்டம்.
முன்னாள் அமைச்சர்கள் என்று அவர் குறிப்பிட்டாலும் தனக்காகவே இந்த திட்டத்தை அறிவித்ததாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.
கோல்டன் பாஸ் எனப்படும் இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து மம்தா பானர்ஜி இந்த கோல்டன் பாஸை ரத்து செய்து உத்தரவிட்டார். நேற்று 62வது பிறந்த நாளை கொண்டாடினார் லாலு. அந்த சமயம் பார்த்து கோல்டன் பாஸை ரத்து செய்துள்ளார் மம்தா என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கம் 'சிக்' ஆனா இப்படித்தான் நடக்கும்..!
ரயிலில் மீண்டும் 'ஜனதா சாப்பாடு'...
இதற்கிடையே ரயில்களில் செல்லும் ஏழை பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு குறைந்த விலையிலான 'ஜனதா சாப்பாடு' மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
ரயில் சேவை குறித்து அறிந்து கொள்ள உதவும் 139 என்ற எண்ணுக்கு இருக்கும் அழைப்புக் கட்டணத்தை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
தற்போது ரயில் கிளம்புவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னால் பயணிகளின் இறுதி அட்டவணை ஒட்டப்படுகிறது. இந்த பணிகளை நான்கு மணி நேரம் முன்னதாக செய்து முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ரயிலில் மீண்டும் ஜனதா சாப்பாடை கொண்டு வர இருக்கிறோம். இதனால் ஏழை பயணிகள் அதிகம் பயனடைவார்கள்.
மேலும், ராஜதானி எக்ஸ்பிரஸ் போன்ற நீண்ட தூரம் செல்லும் ரயில்கள் தாமதமானால் அது போன்ற சமயங்களில் பயணிகள் பட்டினி கிடைக்க வேண்டி உள்ளது. இது போன்ற அனுபவம் எனக்கும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க வேண்டும். அந்த வேளையில் அவர்களுக்கு கூடுதல் உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் ரயில்களில் இருக்கும் பக்கவாட்டு படுக்கை விரைவில் நீக்கப்படும். நாடு முழுவதும் உள்ள 7,000 ரயில் நிலையங்களிலும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
அதேபோல் மூன்று அல்லது நான்கு ரயில் நிலையஙகளுக்கு இடையில் குறைந்தபட்சம் ஒன்றிலாவது ஓய்வு அறைகள் நிச்சயம் இருக்கம் வகையில் பார்த்து கொள்ளப்படும். பெருநகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் கூடுதல் ஓய்வு அறைகள் கட்டித் தரப்படும்.
தற்போதுள்ள சேவைகளில் எதையும் தனியார்வசம் ஒப்படைக்கும் திட்டம் எதுவுமில்லை. ஆனால், புதிய சேவைகளில் சிலவற்றில் தனியாரின் உதவி பெறப்படும் என்றார் மம்தா.












Click it and Unblock the Notifications