பிரபாகரன் மரணச் சான்றிதழ் கேட்கும் கோர்ட்
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மரணச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு இலங்கை அரசுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இதையடுத்து டெல்லியிலிருந்து கொழும்புக்கு ஓடி வந்த இந்திய தூதர்கள் நாராயணனும், எஸ்.எஸ்.மேனனும், பிரபாகரனின் மரணச் சான்றிதழை வழங்குமாறும், அதைத் தந்தால் ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடித்து விட வசதியாக இருக்கும் எனவும் கோரிக்கை விடுத்து விட்டுச் சென்றனர்.
இருப்பினும் இதுவரை மரணச் சான்றிதழ் குறித்து இலங்கை அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் முன்னாள் இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கொலை வழக்கை முடிக்க, பிரபாகரனின் மரணச் சான்றிதழை கோரியுள்ளது கொழும்பு உயர்நீதிமன்றம்.
இதுதொடர்பான உத்தரவை கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க பிறப்பித்துள்ளார்.
கதிர்காமர் கொலை வழக்கில் பிரபாகரன், பொட்டு அம்மான் உள்ளிட்ட புலிகள் இயக்கத் தலைவர்கள் முதல் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.