தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பது வேஸ்ட்-தா.பா!
சென்னை: தமிழகத்தில் போலீஸ் துறை நிலை குலைந்துவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.
அவர் கூறுகையில்,
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை பாதுகாப்பதில் மத்திய அரசு அக்கறை இல்லாமல் இருப்பதால்தான் இனவெறி தாக்குதல் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு உரத் தட்டுப்பாட்டை போக்க ஸ்பிக் மற்றும் மெட்ராஸ் பெர்டுலைசர் ஆகிய தொழிற்சாலைகளை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கொலைகள் நடக்கிற முறைகள் அதிர்ச்சியை தருகிறது. நகைக்கடை வியாபாரி கண்டம் துண்டமாக வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் உறுப்புகளை அங்கம் அங்கமாக வெட்டி சென்னை நகரில் பல இடங்களில் வீசி விட்டு தப்பி ஓடிவிட்டார்கள் என்ற செய்தி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு குற்றவாளியை ஆயுதங்களை பயன்படுத்தி அடித்து கொலை செய்துள்ளனர். சிறையின் உள்ளே எப்படி கம்பி, கத்தி வந்தது என்று தெரியவில்லை.
போலீஸ்காரர்கள் அவர் அவர் வேலையை ஒழுங்காக செய்து கொண்டிருந்தால் இவ்வளவு சம்பவங்கள் நடைபெறாது. எனவே இத்தகைய கொலைகளை தடுப்பதற்கும், மக்களிடம் புதிய நம்பிக்கை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது என்று சொல்ல முடியாது. சட்டத்தை பாதுகாக்கவேண்டிய காவல்துறை நிலை குலைந்துபோய் உள்ளது. அல்லது கட்டுண்டுபோய் கிடக்கிறது. இதை சரிசெய்யாவிட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வரலாம்.
ஆளும் கட்சியினர் சுய லாபத்துக்காக காவல் துறையைப் பயன்படுத்துவதால், மக்களுக்கான பாதுகாப்பு குறைந்துள்ளதே இதற்கெல்லாம் காரணம்.
மத்தியில் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் குறைந்தபட்ச செயல் திட்டம் இருந்தது. லாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்பது அந்த செயல் திட்டத்தில் இருந்ததால் பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்டன.
ஆனால் தற்போதைய புதிய அரசில் குறைந்தபட்ச செயல் திட்டம் எதுவும் இல்லை.
இதனால் தமிழகத்தில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம், சேலம் உருட்டாலை உள்பட நாட்டின் பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம். என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவை எதிர்க்கிறோம். இந்த முடிவை எடுத்துள்ள மத்திய அமைச்சரவையில் திமுகவும் இடம் பெற்றுள்ளதால் இது சம்பந்தமாக அவர்களிடம் கோரிக்கை விடமுடியாது.
இலங்கை தமிழர் பிரச்சினையில் பல கோரிக்கைகள் வைத்து ஏமாந்த பிறகு, இனிமேல் இவர்களிடம் கோரிக்கை வைப்பதை விட மக்களிடம் கோரிக்கை வைப்பது, உலக நாடுகளிடம் கோரிக்கை வைப்பதே மேல் என்றார்.