தீவிரவாத தாக்குதல் சொதப்பல் எதிரொலி- மும்பை கமிஷனர் அதரடி மாற்றம்
டெல்லி: மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய வெறித் தாக்குதலின்போது திறம்பட செயல்படத் தவறியதற்காக மும்பை மாநகர காவல்துறை ஆணையர் ஹசன் கபூர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.
மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைப் பார்த்து உலகமே அதிர்ச்சியில் உறைந்து போனது.
இந்த பரபரப்புச் சம்பவத்தின்போது போலீஸ் நடவடிக்கை குறித்து விசாரிக்க ராம் பிரதான் கமிட்டி நியமிக்கப்பட்டது. இந்த கமிட்டி அளித்த அறிக்கையில், காவல்துறை ஆணையர் கபூரின் செயல்பாடுகள் படுமோசமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ஒரு திறமையான காவல்படையின் தலைவராக கபூர் செயல்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று கபூர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவரை மகாராஷ்டிர காவல்துறை வீட்டு வசதிப் பிரிவு இயக்குநராக அரசு நியமித்துள்ளது.
இணை ஆணையர் கே.எல். பிரசாத், ஆணையர் பொறுப்பை தற்காலிகமாக கூடுதலாக வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் நடந்த அனைத்து இடங்களுக்கும் கபூர் செல்லவில்லை. மேலும் தேவையான அளவுக்கு போலீஸ் படையினரை அனுப்பவும் அவர் துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய 3 நாட்களும், ஹோட்டல் டிரைடென்ட் ஓபராய் ஹோட்டலுக்கு வெளியேயே அவர் முகாமிட்டிருந்தார்.
சக அதிகாரிகளுடன் அவர் சரிவர தொடர்பு கொள்ளவில்லை. ஆணையர் அலுவலகத்திற்கு அடிக்கடி போகவில்லை. சரியான திட்டமிடலை அவர் மேற்கொள்ளவில்லை. மொத்தத்தில் படு மெத்தனமாக அவர் நடந்து கொண்டார் என கமிட்டி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.