சுடிதாருக்குப் பதில் சேலை அணிய உத்தரவு - கல்லூரியை எதிர்த்து மாணவி வழக்கு
சென்னை: கல்லூரிக்கு சுடிதார், குர்தா போன்றவை அணிந்து வரக் கூடாது. சேலை மட்டுமே அணிந்து வர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவி வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை போரூர் வெங்கடேஸ்வரா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவியான ஜி.கமலம், உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனு:
நான் இந்தக் கல்லூரியில் பி.எஸ்.எம்.எஸ். படிப்பை முடித்து அங்குள்ள மருத்துவமனையில் பயிற்சி எடுத்து வருகிறேன். கல்லூரிக்கு செல்லும் போது சுடிதார், குர்தா போன்ற உடைகளை நான் அணிந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம், சுடிதார் அணிய தடை விதித்து, சேலை மட்டுமே அணிந்து வர உத்தரவிட்டது.
சுடிதார் அணிவதுதான் எனக்கு வசதியாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது. எனவே இதுபற்றி கல்லூரி முதல்வர் மற்றும் தாளாளரிடம் பேசினேன். சுடிதார் அணிய அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டேன்.
கல்லூரியில் சேரும்போது சேலை மட்டும் அணிவதற்கான நிபந்தனை குறிப்புகள் எதையும் குறிப்பிடவில்லையே என்றும் கூறினேன். எனது கோரிக்கையை கல்லூரி நிர்வாகம் ஏற்கவில்லை. சேலைதான் கட்ட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். எனவே இதுதொடர்பாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன்.
அதற்கு பதிலளித்த நிர்வாகம், சேலை அணியாவிட்டால் இங்கு படிப்பைத் தொடர முடியாது. சேலை அணியாவிட்டால் வேறு கல்லூரியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று கூறியிருந்தது. பயிற்சி காலகட்டத்தில் வேறு கல்லூரியில் எப்படி சேர முடியும்?
மாணவிகள் உடை உடுத்துவது பற்றி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் எந்த நிபந்தனையும் விதிக்காத நிலையில், அந்த பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் வெங்கடேஸ்வரா கல்லூரி மட்டும் உடைக் கட்டுப்பாடுகளை விதித்திருப்பது முறையான செயல் அல்ல. பல்கலைக்கழக மானியக் குழுவும் உடைக் கட்டுப்பாடுகளை மாணவிகளுக்கு விதிக்கவில்லை.
எனவே பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு எதிராக இந்தக் கல்லூரி பிறப்பித்த உடை கட்டுப்பாட்டு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். என்னை சேலை கட்ட கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல் அருள்மொழி, மாணவி சார்பில் ஆஜராகினார்.
உடைக்குத் தடை விதிப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. அந்த மாணவி, ஜீன்ஸ்-டி ஷர்ட் அணிய அனுமதி கேட்கவில்லை. பாதுகாப்புக்கு உகந்த சுடிதார் அணியவே அனுமதி கேட்கிறார் என்று அருள்மொழி வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, மாணவி தரப்பில் ஆஜராகும் நீங்கள் சேலைதான் அணிந்து வந்திருக்கிறீர்கள். ஆனால் சுடிதாருக்காக நீங்கள் வாதிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. கல்லூரி நிர்வாகத்துக்காக ஆஜராகி இருக்கும் வக்கீலும் சேலைதான் அணிந்திருக்கிறார் என்றார்.
அதற்கு அருள்மொழி, கல்லூரியில் தனியாக தெரிய வேண்டும் என்பதற்காக தென்மண்டல பெண்கள் உடையான சேலையை அணியும்படி பயிற்சி கால மாணவிகளை கட்டாயப்படுத்தும் கல்லூரி நிர்வாகம், அதே மண்டல ஆடையான வேஷ்டி-சட்டையைத்தான் மாணவர்களும் அணிய வேண்டும் என்று வற்புறுத்துவார்களா?
மாணவிகளுக்கு விதிக்கப்படும் உடை கட்டுப்பாடுகள், மாணவர்களுக்கும் விதிக்கப்பட்டால்தானே நியாயமாக இருக்கும் என்று சூடாக கேட்டார்.
இதையடுத்து மாணவியின் மனுவுக்கு திங்கள்கிழமைக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கல்லூரி நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார் நீதிபதி.
தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் உடைக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாணவ, மாணவிகள் அதிருப்தியுடன் உள்ளனர்.
மாணவிகள் ஜீன்ஸ் பேன்ட், டைட்ஸ் உள்ளிட்டவை போடக் கூடாது என்று ஏற்கனவே தடை உள்ளது. இருப்பினும் சுடிதார் போடக் கூடாது என இதுவரை எந்தக் கல்லூரியும் தடை விதிக்கவில்லை. பெண்களுக்கு சுடிதார் மிகவும் பாதுகாப்பான உடை, சவுகரியமான உடை என்று அனைவராலும் கூறப்படும் நிலையில் அந்த உடைக்கு சென்னை கல்லூரி தடை விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் கான்பூரில் உள்ள சில கல்லூரிகளில் மாணவிகள் ஜீன்ஸ் பேன்ட் போடக் கூடாது, டைட்ஸ் போடக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. இதற்கு மாணவிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, ஆசிரியைகள் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போடக் கூடாது, இறுக்கமாக ரவிக்கை அணியக் கூடாது என இன்னொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications