ஆற்றில் புதைத்து சிறுவன் சித்ரவதை-ஒருவர் கைது
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக ஐந்து வயது சிறுவனை ஆற்று மணலில் புதைத்து சித்ரவதை செய்த கொடூர வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானுக்கு அருகில் உள்ள கீழஅமராவதி அக்ரகார தெருவை சேர்ந்தவர் பால். இவருக்கு விஜயகுமாரி என்ற மனைவியும், மோகனசுந்தரம் என்ற ஐந்து வயது மகனும் உள்ளனர்.
விஜயகுமாரி தனது வீட்டு பக்கத்தில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். அப்போது சிவன் கோவில் தெருவை சேர்ந்த கஜேந்திரன்(31) என்பவர் விஜயகுமாரியின் கடைக்கு வந்து, கடனுக்கு சிகரெட் கேட்டுள்ளார். ஆனால், கடன் தர முடியாது விஜயகுமாரி மறுத்துவிட்டார். இதையடு்தது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
மறுநாள் அதே நேரத்தில் கடைக்கு வந்த கஜேந்திரன் கடையில் இருந்த பையை தூக்கிகொண்டு ஓடிவிட்டார். இதையடுத்து விஜயகுமாரி போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து வலங்கைமான் போலீசார் கஜேந்திரனை விசாரணைக்கு அழைத்து சென்று கடுமையாக கண்டித்து அனுப்பியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கஜேந்திரன், விஜயகுமாரியை பழி வாங்க தி்ட்டமிட்டார். இதையடுத்து அவர் கடந்த 13ம் தேதி தெருவில் விளையாடி கொண்டிருந்த விஜயகுமாரியின் மகன் மோகனசுந்தரத்தை தூக்கி சென்றார்.
வெட்டாறு பகுதியில் வைத்து சிறுவன் என்று பார்க்காமல் மோகனசுந்தரத்தை கம்பால் அடித்து சித்ரவதை செய்துள்ளார். பழிவாங்கும் நோக்கம் ஒன்றிலே குறியாக இருந்த கஜேந்திரனின் ஆத்திரம் அப்போதும் அடங்கவில்லை. அந்த சிறுவனை ஆற்றுமணலில் மார்பு அளவு வரை புதைத்து, அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் அந்த சிறுவனின் அலறல் சத்தம் கேட்ட சிலரும், அவனை காணவில்லை என தேடிய அவனது பெற்றோரும் அங்கு வருவதை பார்த்த கஜேந்திரன் அங்கிருந்து தப்பியோடினான். அந்த சிறுவன் உடனடியாக கும்பகோணம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டான்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட போலீசார் கஜேந்திரனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications