ஒரு வழியாய் கூடுகிறது பாஜக செயற்குழு.. அனல் பறக்கும்

தேர்தல் தோல்வியையடுத்து எதுவுமே பேசாமல் அமைதி காக்க பாஜக தலைவர்களான அத்வானியும் அவரது ஆதரவாளர்களான அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சி்ங், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் திட்டமிட்டனர். பிரச்சாரத் திட்டத்தையும், வேட்பாளர் தேர்வையும் முன்னின்று நடத்திய இந்த 5 பேரும் அமைதியாய் இருந்துவிட முடிவு செய்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
ஆர்எஸ்எஸ்சின் முழு ஆதரவு பெற்ற மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி, இரண்டாம் மட்டத் தலைவர்களில் மிக முக்கியமானவர்களான யஷ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங் ஆகியோர் தோல்விக்குக் காரணமானவர்கள் யார், காரணங்கள் என்ன என்பது குறித்து உடனடியாக ஆராய வேண்டும், விவாதிக்க வேண்டும் என்று கோரி வந்தனர்.
அதே போல முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வலதுகரமான பிரஜேஸ் மிஸ்ராவும் இடையில் புகுந்து தேர்தல் தோல்விக்கு நரேந்திர மோடி, வருண் காந்தி ஆகியோரின் பிரச்சாரமே காரணம் என்றும், பாஜக தன்னைத் திருத்திக் கொள்ளாவிட்டால் தோல்வியிலிருந்து மீள்வது கடினம் என்றார். இவரது கருத்து வாஜ்பாயின் கருத்தாகவே கருதப்படுகிறது.
ஆனாலும் அத்வானி தரப்பு தொடர்ந்து மெளனம் காத்ததால் யஷ்வந்த் சின்ஹா தனது பதவிகளை ராஜினாமா செய்தார். அத்தோடு அத்வானிக்கு எழுதிய 5 பக்க கடிதத்தையும் மீடியாவுக்கு லீக் செய்தார். இதைத் தொடர்ந்து மாநில அளவிலும் தேர்தல் தோல்விக்குக் காரணமான தலைவர்கள் மீது நடவடிக்கைக கோரி ஆங்காங்கே அதிருப்தி தலைவர்கள் போர்க் கொடி உயர்த்த ஆரம்பித்துள்ளனர்.
இதனால் அருண் ஜேட்லியும் தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந் நிலையில் வேறு வழியின்றி வரும் 20ம் தேதி தேசிய செயற்குழுக் கூட்டத்தை அக் கட்சி கூட்டியுள்ளது. 2 நாட்கள் நடக்கும் இக் கூட்டத்தை புறக்கணிக்க அருண் ஜேட்லி முடிவு செய்துள்ளார்.
தோல்விக்கு தன்னையே குற்றம் சாட்டுவார்கள் என்பதால் கோடையைக் கழிக்க குடும்பத்தோடு ஐரோப்பிய நாடுகளி்ல் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டார். செயற்குழு முடியும் வரை தனது பயணத்தை அவர் நீடித்துவிட்டார்.
அதே போல செயற்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள யஷ்வந்த் சின்ஹாவும் இக் கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை. இருப்பினும் அவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications