மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆபத்தில்லை-ஏடிஜிபி
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அச்சுறுத்தல் இல்லை, கோயிலின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சட்டம்-ஒழங்கு போலீஸ் ஏ.டி.ஜி.பி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தென் மாவட்ட சட்டம்-ஒழுங்கு குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக ஏ.டி.ஜி.பி ராதாகிருஷ்ணன் மதுரைக்கு வருகை தந்தார்.
கடந்த ஜூன் 15ம் தேதி விரகனூர் கானாத்துப் பாலத்திற்கு அடியில் இருந்த டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் வைக்கப்பட்ட இடத்தை ஏ.டி.ஜி.பி. பார்வையிட்டார்.
பின்பு, கருப்பாயூரணி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள செயலிழக்கப்பட்ட டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளையும், அதற்கு பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்களையும் பார்வையிட்டார்.
பின்பு, சட்டம்-ஒழங்கு போலீஸ் ஏ.டி.ஜி.பி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது...
வெடிகுண்டுகளை வெளியில் இருந்து தயாரித்து இங்கு கொண்டு வந்துள்ளனர். வெடிகுண்டுகளை தயாரித்த மர்ம நபர்களை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வெடிகுண்டுகளில் பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்கள் சாதாரண நாட்டு குண்டு வகையை சேர்ந்தவை தான்.
பாதுகாப்பு கருதி தென்மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
பின்பு, நகர காவல் கட்டுப்பாட்டு அறையில் ஏ.டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் கமிஷனர் நந்தபாலன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.