'ஸ்வைன்'-டெல்லியில் ஒருவர் 'சீரியஸ்'
டெல்லி: இந்தியாவில் ஸ்வைன் ப்ளூவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஒருவரின் உடல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது.
ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல் உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இந்த நோயால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து கடந்த 17ம் தேதி டெல்லி வந்த 25 வயது வாலிபருக்கும், அதற்கு மறுநாள் கனடாவிலிருந்து பெல்ஜியம் வழியாக டெல்லி வந்த 29 வயது இளைஞருக்கும் ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவில் இருந்து லண்டன் வழியாக மும்பை வந்து பின்னர் பூனே சென்ற 24 வயது வாலிபருக்கும் சோதனையில் ஸ்வைன் ப்ளூ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னிலிருந்து சிட்னி வழியாக மும்பை வந்த 23 வயது பெண் ஒருவருக்கும் இந்த நோய் தாக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து இந்தியாவில் ஸ்வைன் ப்ளூ தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. இதில் 37 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். மீதமுள்ள 26 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களில் டெல்லியை சேர்ந்த 66 வயதான பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டதை அடுத்து செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.