'படுகர்களை பிரிக்க பார்க்கும் திமுக'-ஜெவிடம் புகார்
நீலகிரி: திமுக அரசு படுகர் சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்த முயல்வதாக அச் சமுதாயத் தலைவர்கள் அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் படுகர் சமுதாய மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அந்த சமுதயாத்தை சேர்ந்த நாக்குபெட்டா நலச்சங்க தலைவர் ரங்கா கவுடர் உள்ளிட்டோர் நீலகிரியில் கோடநாட்டில் ஓய்வெடுத்து வரும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்தனர்.
ஜெயலலிதாவிடம் அவர்கள் கூறுகையில்,
படுகர் சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் ராமச்சந்திரனும், முன்னாள் எம்எல்ஏ குண்டனும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்.
அவர்கள் தங்களது சொந்த லாபத்துக்காக படுகர் சமுதாயத்தை திமுகவுக்கு பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் தூண்டுதல் காரணமாக போலீசார் எங்கள் சமுதாயத்தின் முக்கிய தலைவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து வருகின்றனர் என்றனர்.
அவர்களது குறைகளையும், பிரச்சனைகளையும் கேட்டறிந்த ஜெயலலிதா, அதை விரைவில் தீர்த்து வைப்பதற்கு தன்னால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்வதாக உறுதி அளித்தார்.