வங்கியில் ரூ. 4.5 கோடி மோசடி-டாக்டருக்கு வலை
கடையநல்லூர்: கடையநல்லூர் இந்தியன் வங்கி கிளையில் ரூ. 4.5 கோடியை மோசடி செய்த டாக்டரையும், மற்றொரு பெண்ணையும் போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக வங்கியின் மானேஜர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தென்காசியில் பிரபலமான டாக்டர்கள் தங்கம் மற்றும் கிருஷ்ணமூர்ததி. இவர்களின் இளைய மகன் வெங்கடேஷன். இவரும் தென்காசியில் டாக்டராக உள்ளார். இவரது மனைவியும் டாக்டர் ஆவார். இவர்கள் குடும்பத்திற்கு சொந்தமாக தென்காசியில் கிளினிக் ஒன்று செயல்படுகிறது.
மேலும், டாக்டர் வெங்கடேஷன், மாயா என்ற பெண்மணியுடன் சேர்ந்து கிரனைட் தொழில், காற்றாலை அமைத்தல் போன்ற தொழில்களையும் செய்து வந்தார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் கடையநல்லுர் இந்தியன் வங்கியில் பலரையும் இங்கு டெபசிட் செய்ய வைத்துள்ளனர்.
அத்துடன் தங்களின் தொழில் வளர்ச்சிக்காக வெளிநாட்டில் இருந்து பலகோடி ரூபாய் வர இருப்பதாகவும், அதை இந்த கிளையில் டெபசிட் செய்ய போதவதாகவும் மானேஜர் அய்யாமணிக்கு ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை தொடர்ந்து அவர்கள் மானேஜர் அய்யாமணியுடன் நெருக்கமாகிவிட்டார்கள்.
இந்நிலையில் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு இந்த வங்கியில் தங்களுக்கு தெரிந்த ஒருவரை ரூ. 5 கோடி டெபசிட் செய்ய வைத்துள்ளனர். அதன் பின்னர் இவர்கள் இருவரும் தங்களது வேலையை காட்டியுள்ளனர்.
டெபாசிட் பணம் ரூ. 5 கோடியை டெபாசிட் செய்தவருக்கு தெரியாமல் போலி ஆவணம் தயாரித்து அந்த டெபசிட்டின் பேரில் ரூ. 4.5 கோடி கடன் பெற்றுள்ளனர். இவர்கள் கடன் பெற்ற சில நாட்களிலே டெபாசிட் செய்தவரும் தனது பணத்தை திரும்ப எடுத்து கொண்டார்.
இது சமீபத்தில் நடந்த வங்கி ஆடிட்டிங்கின் போது இந்த கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி மானேஜர் அய்யாமணி மற்றும் உதவி மானேஜர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே கடன் பெற்ற டாக்டர் வெங்கடேஷன் மற்றும் அவரது பங்குதாரர் மாயா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வங்கி வாடிக்கையாளர்களை மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.