நாடு முழுவதும் பெரும் தண்ணீர் பஞ்ச அபாயம்
டெல்லி: பருவ மழை தொடர்ந்து தாமதமாகிக் கொண்டு வருவதாலும், இந்த ஆண்டு, குறைந்த அளவிலான மழையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாலும், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் குடிநீர்ப் பஞ்சம் தொடங்கி விட்டது. இது மேலும் அபாயகர அளவுக்கு மாறும் எனவும் அஞ்சப்படுகிறது.
தென் மேற்குப் பருவ மழை எதிர்பார்த்தது போல இல்லை. முன்கூட்டியே ஆரம்பித்த மழை தற்போது நின்று போய் விட்டது. 25ம் தேதி முதல் மீண்டும் பெய்யத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையும் கூறியுள்ளது.
இருந்தாலும் கூட இந்த ஆண்டு சராசரி அளவில் மழை இருக்காது, குறைந்த அளவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர்ப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும் எனத் தெரிகிறது.
வட மாநிலங்களில் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. டெல்லி, மும்பை உள்பட பல நகரங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தண்ணீருக்காக அலைய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
பாட்னா, போபாலில் மக்கள் மறியல்..
குடிநீர் கேட்டு இன்று பாட்னா, போபால் உள்பட பல இடங்களில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் தண்ணீர்ப் பிரச்சினையுடன், மின்சார தட்டுப்பாடும் சேர்ந்து பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் மழை வேண்டி அனைத்து சமுதாய மக்களும் பிரார்த்தனை செய்யுமாறு முதல்வர் ராஜசேகரரெட்டி வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதன்படி இன்று மழைக்காக 200 கோவில்களில் பிரார்த்தனை நடந்தது.
பருவமழை இன்னும் பெய்யாததால் பஞ்சாப், அரியானா உள்பட வட மாநிலங்களில் கடும் பாதிப்பு இருக்கும். டெல்லியை பொறுத்தவரை ஜூலை மாத மத்திவரை மழை பெய்ய வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு உள்ள டெல்லியில் இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். அங்கு மின் தட்டுப்பாடும் உள்ளது.
கடந்த ஆண்டு டெல்லியில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. இந்த ஆண்டு பருவமழை குறைவாக இருக்கும் என்பதால் வறட்சி ஏற்படும்.
வறண்டு போன பக்ரா..
நாடு முழுவதும் உள்ள முக்கிய அணைகள் ஏற்கனவே வறண்டு போக ஆரம்பித்து விட்டன.
வட மாநிலங்களில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான பக்ரா நங்கல் அணையில் நீர்மட்டும் வெகுவாக குறைந்து விட்டது.
தற்போது அணையில் 1504 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இது கடந்த ஆண்டை விட 90 அடி குறைவாகும்.
இதன் காரணமாக இந்த அணையை நம்பியுள்ள டெல்லி, சண்டிகர், ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீருக்குப் பிரச்சினை ஏற்படும் எனத் தெரிகிறது.
ஆசியாவிலேயே மிகப் பெரிய அணை பக்ரா நங்கல்தான். இங்கு தண்ணீர் இல்லாவிட்டால், மேற்கண்ட மாநிலங்களில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான தண்ணீர் பிரச்சினையாகி விடும்.
குடிநீர், விவசாயம் தவிர மின் உற்பத்தியிலும் பக்ரா நங்கல் அணை முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் நீர் மின் உற்பத்தியும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திலும் நிலைமை மோசம்..
தமிழகத்திலும் நிலைமை மோசமாக உள்ளது. மேட்டூர் உள்ளிட்ட அனைத்து முக்கிய அணைகளிலும் தண்ணீர் மட்டம் மோசமான நிலையில்தான் உள்ளது.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் கவலைக்குரியதாக மாறியுள்ளது. ஏற்கனவே வீராணம் ஏரியில் நீர் மட்டம் குறைந்து விட்டதால் அங்கிருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டு விட்டது.
புறநகர்ப் பகுதிகளில் இப்போது தண்ணீர்ப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
மழை உரிய நேரத்தில் பெய்தால் மட்டுமே நிலைமை சற்று மேமம்படும் எனத் தெரிகிறது.