அடுத்த வாரம் முதல் தமிழகம் முழுவதும் ரயிலில் ரூ. 10க்கு 7 பூரி
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அடுத்த வாரம் முதல் ஜனதா சாப்பாடு வழங்கப்படும். ரூ. 10க்கு 7 பூரி, மசாலா கிழங்கு ஆகியவை கொடுக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக ரயில்வே அமைச்சகத்துக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்தன. அதே போல், உணவு பொருட்களின் விலைகளும் தாறுமாறாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இதையடுத்து மத்திய ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி இந்த குறைகளை போக்க உடனடியாக உத்தரவிட்டார். மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ஜனதா சாப்பாடு கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.
உணவு விலையை அதிகரிக்கும் மற்றும் உணவின் விலையை குறைந்து வழங்குபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது உரிமம் பறிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் சென்னை சென்ட்ரல், ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களில் மட்டுமே ஜனதா சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. இதை அனைத்து ரயில் நிலையங்களுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என பயணிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஜனதா சாப்பாடு கிடைக்க தேவையான நடவடிக்கைகள் ரயில்வே அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். இதற்காக சில தனியார் ஹோட்டல்கள் மூலம் ஜனதா சாப்பாடு தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
அடுத்த வாரம் முதல் சென்னை எழும்பூர், மதுரை, கோயம்புத்தூர், விழுப்புரம், திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, திருவனந்தபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் ஜனதா சாப்பாடு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனதா சாப்பாட்டில் ரூ. 10க்கு 7 பூரி மற்றும் மசாலா கிழங்குடன் வழங்கப்படுவது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் 7 பூரி, 175 கிராம் மசாலா கிழங்கு ஒரு அட்டை பெட்டியில் வைத்து கொடுக்கப்படுகிறது. இதை இந்திய சமையல் மற்றும் சுற்றுலா துறை தயாரித்து கொடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications