இந்திய மாணவர்களை காக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?
டெல்லி: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பதை இணையத் தளத்தில் விளக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தாக்கலான பொது நல வழக்கில் மத்திய அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்தது. ஆனால், அதில் திருப்தியைடயாத நீதிபதிகள் தன்வீர் பண்டாரி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச்,
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு நிலைமை மோசமாக உள்ளது. அவர்கள் தாக்கப்படுவது நிற்கவில்லை. இதைத் தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை பலன் அளிக்கவில்லை மத்திய அரசு எடுத்த முயற்சிகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து அங்கு மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள். இதை எப்படி பார்த்து கொண்டிருக்கிறீர்கள்?.
இந்திய மாணவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். மாணவர்களில் பெற்றோரும், உறவினர்களும் பீதியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர் நலத்துறையின் இணையத் தளம் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் இணையத் தளம் ஆகியவை மூலம் உரிய பாதுகாப்பு உத்தரவாதங்களைத் தர வேண்டும்.
அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அதில் விளக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
முன்னதாக அரசின் சார்பில் வாதிட்ட அட்டர்னி ஜெனரல் வானாவதி, ஆஸ்திரிலேயாவி்ல் இந்திய மாணவர்கள் மீது நடந்த அனைத்துத் தாக்குதல்களும் இன வெறி தொடர்பானவை அல்ல என்றார்.
இந் நிலையில் ஆஸ்திரேலியாவில் நேற்றும் இரு இந்திய மாணவர்கள் பீர் பாட்டில்களால் தாக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் மத்திய அரசு அறிக்கை கோரியுள்ளது.