10ம் வகுப்பு தேர்வு ரத்து-வைகோ எதிர்ப்பு

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி்ல்,
நாடு முழுவதும் பத்தாவது வகுப்பு பொதுத்தேர்தலை நீக்க வேண்டும் என மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் முயற்சித்து வருகிறார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்பதை அவர் காரணமாக சொல்லி இருக்கிறார்.
எந்த மாநில அரசையும் கலந்து ஆலோசிக்காமல். கல்வியாளர்களின் கருத்தையும் கேட்காமல் தனது சொந்தக் கருத்தை நாட்டு மக்களின் மீது திணிக்க நினைக்கிறார். இது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். கல்வியின் தரத்தைக் குறைக்கும்.
கல்வி முறையில் மாற்றங்கள் செய்வதற்கு முன்பு நீண்ட கால ஆய்வுகள் செய்தும் அனைத்துத் தரப்பையும் கலந்து ஆலோசித்துத்தான் முடிவு எடுக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வுகள் இருந்தால்தான் நல்ல முடிவுகள் வர வேண்டும் என்பதற்காக பள்ளிகள் ஈடுபாட்டோடு கற்பிக்கும் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்பதற்காக உழைக்கின்ற மனநிலையை மாணவர்கள் இடையே வளர்க்கும். போட்டியைச் சந்திக்கின்ற எண்ணத்தை வளர்க்கும்.
பொதுத்தேர்வுகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்ற துணிவை மாணவர்களுக்குப் பள்ளிகள் பயிற்றுவிக்க வேண்டும். அதை தவிர்த்து தேர்வை ஒழித்துவிட வேண்டும் என்பது மிகவும் தவறான கருத்து.
இப்போதைய தேர்வு முறையில் மனப்பாடம் செய்து மதிப்பெண்கள் வாங்குகின்ற நிலைதான் உள்ளது. புரிந்து படிக்கின்ற பாடத்திட்டம் இல்லை என்று கருதினால் அதற்காக புதிய பாடத்திட்டங்களைக் கொண்டு வரலாம்.
கல்வி சீர்திருத்த விவகாரத்தில் மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமல், தான்தோன்றித் தனமாகச் செயல்படும் போக்கை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்திய விடுதலையின் போது மாநில அரசுப் பட்டியலில் இருந்த கல்வி உள்ளிட்ட பல அதிகாரங்களை, நெருக்கடி நிலை காலத்தில் சர்வாதிகாரமான முறையில் காங்கிரஸ் அரசு பறித்துக்கொண்டது.
அதேபோன்று, இப்போதும் செயல்பட நினைக்கிறது. அதன் முதல் கட்டம்தான், இந்த முயற்சி. இது மாநில சுயாட்சி தத்துவத்துக்கே வேட்டு வைக்கின்ற வேலை; மதிமுக இந்த முயற்சியைக் கடுமையாக எதிர்க்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications