புலிகள் வைத்த கண்ணிவெடிகளை அகற்றும் ஆசிரியர் ரஜினி காந்த்

ஒரு தனிக் குழுவை ஏற்படுத்திக் கொண்டு, அந்தக் குழுவினருடன் ஒவ்வொரு பகுதியாகச் சென்று கண்ணிவெடிகளை அகற்றி வருகிறார் ரஜினிகாந்த்.
2007ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளையும் புலிகள் வசமிருந்து மீட்டது இலங்கை ராணுவம். புலிகள் கட்டுப்பாட்டை உடைத்து விட்டாலும் கூட அவர்கள் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதைத்து வைத்து விட்டுப் போன கண்ணிவெடிகள் இன்னும் கூட முழுமையாக அகற்றப்பட முடியாத நிலை.
காரணம், கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அகற்ற போதிய நிபுணர்கள் இல்லாதது ஒரு பக்கம், அரசின் அலட்சியம் மறுபக்கம்.
இதன் காரணமாக எங்கு கண்ணிவெடி இருக்குமோ என்ற பீதியில்தான் மக்கள் இங்கு வசித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு காலத்தில் முந்திரித் தோப்புகள் நிறைந்திருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பகுதி கண்ணிவெடிகளால் நிரம்பிக் கிடக்கிறதாம். பல இடங்களில் இன்னும் கூட கண்ணிவெடிகளை கண்டுபிடிக்க முடியாத நிலை. காரணம், புதைத்து நீண்ட காலமாவதால் அவை மண்ணுக்குள் ஆழப் போய் விட்டனவாம்.
இதன் காரணமாக மட்டக்களப்பு முதல் திருகோணமலை வரையிலான ஏ-15 நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் இன்னும் கூட கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு குழுதான் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த கண்ணிவெடி அகற்றும் குழு. இதன் தலைவராக இருப்பவர் ரஜினிகாந்த்.
இவருக்கு இந்தப் பெயர் வரக் காரணம் சுவாரஸ்யமானது. இவரது தந்தைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் உயிராம். இதன் காரணமாகவே தனது மகனுக்கு ரஜினிகாந்த் என்று பெயரிட்டாராம்.
30 வயதாகும் ரஜினிகாந்த், வவுனியாவைச் சேர்ந்தவர். தமிழ் ஆரம்பப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
ரஜினி என்று பெயர் வைத்து விட்டதால் ரஜினியைப் போல சிகரெட்டை தூக்கிப் பிடிப்பது, நாணயத்தை சுண்டி பிடிப்பது என்று ஸ்டைல் பண்ணாமல், மனித உரிமை மீறல்கள் குறித்து அதிக அக்கறை காட்டுபவர் ரஜினிகாந்த்.
அதன் ஒரு பகுதியாகவே மனித உயிர்களைப் பறிக்கும் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் - வேலையை கூட விட்டு விட்டு.
கடந்த ஐந்து ஆண்டுகளாக கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அகற்றும் சேவையை செய்து வருகிறார் ரஜினிகாந்த். கண்ணி வெடிகளை அகற்றும் குழுக்களுக்கு உதவியாக இருந்து வருகிறார். கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில் மக்கள் மீண்டும் குடியேறவும் அவர் உதவிகள் செய்து வருகிறார்.
வாகரை முழுவதும் ரஜினிகாந்த்தின் குழுவினர் கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அகற்றி வருகின்றனர். மிக மிக மெதுவாகவே இந்தப் பணி நடந்து வருகிறதாம். ஒரு நாளைக்கு 10 சதுர மீட்டர் அளவு மட்டுமே பணிகள் நடக்குமாம்.
இந்த ஐந்து ஆண்டு காலத்தில் ரஜினிகாந்த் மட்டும் 260, ஜானி 99 ரக கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அழித்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications