கல்வி.. முதலில் 'பசி ஏப்பம்'.. பிறகு 'புளி ஏப்பம்'
சென்னை: கல்வியில் பின்தங்கிய வட மாவட்ட மக்கள் 'பசி ஏப்பக்காரர்களாக' இருக்கின்றனர். எனவே, முதலில் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்துவிட்டு, பிறகு 'புளி ஏப்பக்காரர்களாக' உள்ள தென் மாவட்டங்கள் கவனிக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் பொறியியல் கல்லூரி அமைக்குமாறு சட்டப்பேரவையில் எம்எல்ஏ லீமா ரோஸ் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பொன்முடி அளித்த பதில்:
மாணவர், மாணவியர் சேர்ந்து படிப்பதுதான் எல்லா நாடுகளிலும் வரவேற்பு பெற்றுள்ளது. தனியாக மாணவியருக்கு இப்போது யாரும் கல்லூரிகள் கேட்பதில்லை. மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கேட்கும் நிலையில், தனி கல்லூரிகளாக இல்லாமல் இப்போதுள்ள கல்லூரிகளில் மகளிருக்கும் உரிய இடம் ஒதுக்கப்படும்.
பெண்களுக்கென சில தனிப்பட்ட பிரச்னைகள் இருப்பதால், மகளிர் கல்லூரிகளும் தேவைப்படுவதாக மார்க்சிஸ்ட் எம்எல்ஏ பாலபாரதி குறிப்பிட்டார். ஆனால், பெண்கள் கல்லூரி என்று வைத்தால் பெண்கள் சேருவதில்லை என்று காங்கிரஸ் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் கூறுகிறார்.
பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்காகத்தான் திருமண உதவி போன்ற திட்டங்களில் பயன்பெற கல்வித் தகுதி ஒரு விதியாக சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆட்சியில் பெண் கல்விக்கு உரிய முக்கியத்துவம் தரப்படும்.
கன்னியாகுமரி போன்ற தென் மாவட்டங்களில் கிருஸ்தவ அமைப்புகளின் மூலம் கல்வி நிலையங்கள் பல்லாண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டதால் அங்கு கல்வி அறிவு அதிகம் உள்ளது. இப்போது கூடுதல் கல்லூரிகள் கேட்கின்றனர். அந்த வகையில் அப் பகுதியினர் 'புளி ஏப்பக்காரர்களாக' உள்ளனர்.
கல்வியில் பின்தங்கிய வட மாவட்ட மக்கள் 'பசி ஏப்பக்காரர்களாக' இருக்கின்றனர். எனவே, முதலில் பின்தங்கிய பகுதியின் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு, பிறகு 'புளி ஏப்பக்காரர்களை' கவனிக்கலாம்.
தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் இடம் பெறும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே அதற்கான கட்டணத்தை கட்டுவதற்கும் கடந்த ஆண்டே வசதி செய்யப்பட்டது.
எனவே, கல்லூரிக்குப் போனால் அதிக கட்டணம் கேட்கிறார்கள் என கருதும் மாணவர்கள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை இங்கேயே செலுத்த முடியும். ஆனால், இத் திட்டத்துக்கு மாணவர்களிடம் அதிக வரவேற்பில்லை.
சில கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தாலும், 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் அரசு நிர்ணயித்ததைவிட குறைவாகவும்கூட வாங்கிக் கொள்கின்றனர். அதையும் இரு தவணைகளாகவும் கட்ட அனுமதிக்கின்றனர்.
மொழி சிறுபான்மையினர் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் அந்த சிறுபான்மையின மாணவர்களுக்குத் தரப்பட வேண்டும் என்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் விதி. ஆனால், பிற மாநிலத்தவர்கள் இங்கு வந்து போலிச் சான்றிதழ் பெற்று அந்த ஒதுக்கீட்டில் சேருவது, இடஒதுக்கீட்டு விதி முறைப்படி கடைபிடிக்கப்படாதது பற்றி அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.
எனவே, கடந்த ஆண்டில் நடந்த மாணவர் சேர்க்கை விவரங்களை அனுப்புமாறு மொழி சிறுபான்மையின கல்லூரிகளுக்கு 15 நாள்களுக்கு முன் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார் பொன்முடி.












Click it and Unblock the Notifications