நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக லிபரான் கமிஷன் தாக்கல் செய்துள்ள அறிக்கை நாடாளுமன்றக் கூட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பும் எனத் தெரிகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2வது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெறும் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் இது. இன்று காலை நாடாளுமன்றம் கூடுகிறது.
முந்தையை லோக்சபாவை விட இம்முறை எதிர்க்கட்சிகளின் பலம் குறைந்து போய் விட்டதால் பெருமளவில் இடையூறுகள், அமளிகள், குறுக்கீடுகள் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், பாஜக கூட்டணிக்கு பெரும் சவாலாக லிபரான் கமிஷன் அறிக்கை உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தை ஆளும் கூட்டணி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும், இதனால் சபையில் புயல் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு மாதம் வரை இந்தக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது.
இன்று கூடும் பட்ஜெட் தொடரில் முதலில் நாளை ரயில்வே பட்ஜெட்டை மமதா பானர்ஜி தாக்கல் செய்கிறார். இதையடுத்து வருகிற திங்கள்கிழமை (ஜூலை 6) பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்கிறார்.