திருவிழாவில் கோஷ்டி மோதல்-18 பேர் படுகாயம்
கரூர்: கரூர் அருகே திருமுக்கூடலூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 18 பேர் காயமடைந்தனர்.
கரூர் அருகே உள்ள திருமுக்கூடலூர் மாரியம்மன் கோவிலில் கடந்த சில நாட்களாக திருவிழா நடக்கிறது. விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்தில் மாவிளக்கு பூஜை நடந்தது.
இந்த கோவில் திருமுக்கூடலூர், சோமூர், அச்சமாபுரம் உள்ளிட்ட ஐந்து ஊர்களுக்கு சொந்தமான கோவில் என்பதால், ஐந்து ஊரை சேர்ந்த பக்தர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.
அப்போது, சோமூரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் தரப்பினருக்கும், திருமுக்கூடலூரை சேர்ந்து முத்துசாமி தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது கைகளப்பாக மாறி, பெரும் மோதலில் முடிந்தது.
இதில் படுகாயம் அடைந்த தமிழரசன் (21), செந்தில்குமார் (21), ராஜா (21), திலீபன் (20) ரேணுகா (37), மனோகரன் (49), கலைவாணன் (20), செல்லமுத்து (70), சின்னதுரை (29), மின்னல்கொடி (51), புனிதம்மாள் (60) ஆகியோர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
எலும்பு முறிவு மருத்துவமனையில் செந்தில்குமார் (30), பிரவின் (18) ஆகியோரும், அமராவதி மருத்துவமனையில் பழனிசாமி (70), சந்திரசேகரன் (49), பாண்டியன் (42), முருகேசன் (45), பெருமாள் (40) என மொத்தம் பதினெட்டு பேர் படு காயங்களுடன் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை கேள்விபட்ட வாங்கல் போலீசார் விரைந்து வந்து, இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதனையடுத்து, மேற்கொண்டு மோதல் ஏற்படாமல் இருக்க கரூர் டிஎஸ்பி இளங்கோ தலைமயில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் எஸ்பி தினகரன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். குற்றவாளிகளை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் ஸ்ரீகாந்த், செங்குட்டுவன் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications