ஸ்டிரைக்-விடுதியிலிருந்து டாக்டர்கள் வெளியேற்றம்
சென்னை: தமிழகத்தில் பயிற்சி டாக்டர்களின் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில் அவர்கள் கல்லூரியில் இருக்கும் டாக்டர்களுக்கான விடுதியில் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பயிற்சி டாக்டர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான ஊக்கத் தொகையை மற்ற மாநிலங்களில் இருப்பதை போல் கணிசமாக உயர்த்த வேண்டும் என்று கோரி பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தின் முதல் கட்டமாக நேற்று முன்தினம் கருப்பு பேட்ஜ் அணிந்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்கு எந்த பயனும் கிடைக்காததை அடு்தது நேற்று உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இன்று இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது. மேலும் அவர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று இதே கோரிக்கைகளை வலியுறுத்தி எம்எம்சி ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி டாக்டர்களும் வேலைக்கு செல்லவில்லை.
சுமார் 500க்கும் மேற்பட்ட டாக்டர்கள் அரசு பொது மருத்தவனை முன்பு இன்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் அவர்களது போராட்டத்தை முடக்கும் முயற்சியாக அவர்களை கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இன்று காலை முதல் விடுதிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எம்எம்சி முதல்வர் டாக்டர் மோகனசுந்தரம் கூறுகையில்,
பணியில் ஈடுபடும் டாக்டர்கள் மட்டுமே டாக்டர்களுக்கான விடுதியில் தங்க முடியும். இதனால் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
டாக்டர்களின் போராட்டத்தால் இதுவரை நோயாளிகளுக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. இவர்களின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.