'லிபரான்'-விரைவான நடவடிக்கை கோரும் வீரமணி
சென்னை: பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான லிபரான் கமிஷன் அறிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் தி.க. தலைவர் வீரமணி கோரியுள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர்,
கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி லிபரான் குழு தனது அறிக்கையை 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே இந்த விசாரணை அறிக்கையை சமர்ப்பித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் செய்தவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் நடவடிக்கை அவசியம். அப்படி நடவடிக்கை எடுத்தால்தான் மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தி விலகும்.
உச்ச நீதிமன்றத்தில் திருமணங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதை தி.க. வரவேற்கிறது. புரோகிதர் மூலம் திருமணம் நடைபெற்றாலும், கோயில்களில் திருமணங்கள் நடைபெற்றாலும், சுயமரியாதை திருமணமாக நடைபெற்றாலும் அவைகள் அனைத்தும் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.
பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ படிப்புகளுக்கு 10ம் வகுப்பு தேர்வு தகுதி உடையதாக தற்போது உள்ளது. இதனால் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்தால் கிராமப்புற மாணவர்கள் தொழில் படிப்புகளில் சேர்வதற்கு சிரமப்படுவார்கள். அதனால் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டியதில்லை என்றார்.