கடல் அரிப்பு-உவரியில் மீனவர்கள் உண்ணாவிரதம்
திசையன்விளை: கடல் அரிப்பை தடுக்க உவரியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என உவரி மீனவர்கள் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர்.
நெல்லை மாவட்டம், உள்ள கடற்கரை கிராமமான உவரி கடல் அரிப்பால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. கடற்கரையில் உள்ள மரங்கள், மின்கம்பங்கள் கடல் அரிப்பால் சரிந்துவிட்டன. இதையடுத்து அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த தார் சாலை முற்றிலும் அரிக்கப்பட்டுவிட்டது. தற்போது வீடுகளும் கடல் அரிப்புக்கு ஆளாகி வருகின்றன.
இதையடுத்து உவரி மீனவர்கள் கேரள மாநிலம் விலிஞ்சம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளதை போன்று உடனடியாக தூண்டில் வளைவு அமைக்கப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதை வலியுறுத்தி உவரி புனித பெலவேந்திரர் ஆலயம் அருகில் கிராம மக்கள் பாதிரியார் சுகிலன் அடிகளார் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர்.
உவரி பஞ்சாயத்து தலைவர் அந்தோணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். தகவல் அறிந்ததும் ராதாபுரம் துணை தாசில்தார் தாமோதரன் சம்பவ இடத்திற்கு வந்து போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கோரிக்கைகளைஅரசுக்கு தெரிவிப்பதாக கூறினார்.
இதையடுத்து உண்ணாவிரத்தை உதவி பாதிரியார் ஐஸ்டின் அடிகளார் முடித்து வைத்தார். போராட்டத்தை முன்னிட்டு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.