பாஜகவில் களையெடுப்பு-வசுந்தரா ராஜே பதவி காலி?
டெல்லி: தேர்தல் தோல்வி எதிரொலியாக பாஜக அதிரடி மாற்றம் செய்ய தயாராகி வருகிறது. வசுந்தரா ராஜே உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நீக்க வேண்டும் என தோழமை அமைப்பான ஆர்எஸ்எஸ் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக படு தோல்வியை கண்டது. ராஜஸ்தான், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் மோசமான தோல்வியை சந்தித்தது.
இதையடுத்து பாஜகவில் களையெடுக்கும் பணிகள் வேகம் பிடித்துள்ளன. ஆர்எஸ்எஸ் பல மாநில தலைவர்களை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
அதில் ஒருவர் ராஜஸ்தான் மாநில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா. அவர் முதல்வராக இருந்த போது அவருக்கு அம்மாநில பாஜகவினரிடம் நல்ல வரவேற்பு இல்லை. ஆனால், தலைமையிடம் அவரை நீக்கவில்லை. அவர் மீதான அதிருப்தி காரணமாகவே இம்முறை அங்கு மொத்தமுள்ள 25 இடங்களில் பாஜக நான்கை மட்டுமே கைப்பற்றி, படுதோல்வியை அடைந்தது.
இதையடுத்து வசுந்தராவின் காலம் முடிந்துவிட்டது. ராஜஸ்தானில் கட்சியை பலப்படுத்து மாநிலத்தில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியம் வந்து விட்டது என ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக தெரிகிறது.
இதனால் ராஜஸ்தான் மாநில பாஜக தலைவராக குலாம் சந்த் கட்டாரியா, கன்சியாம் திவாரி ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அதேபோல் உத்தர பிரதேச மாநில தலைவர் ராம்பதி ராம் திரிபாதியும் நீக்கப்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ் கோரிக்கை வைத்துள்ளது.
இந்நிலையில் பாஜக தோல்விக்கு பொறுப்பேற்று சில முக்கிய தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
அவர்கள் ஓம்பிரகாஷ் ஹோக்லி (டெல்லி), பட்சி சிங் ரவாத் (உத்தரகாண்ட்), ஆத்ம ராம்மான் சந்தா (ஹரியானா), ரஜிந்தர் பண்டாரி (பஞ்சாப்), ஓம் மாத்தூர் (ராஜஸ்தான்).
இவர்களது ராஜினாமா இன்னும் சில நாட்களில் ஏற்கப்படும் என கட்சி தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications