டீசல் விலை உயர்வு - லாரி வாடகை 25 % உயர்த்தப்படுகிறது
நாமக்கல்: டீசல் விலை உயர்வை தொடர்ந்து தமிழகத்தில் லாரி கட்டணங்கள் சுமார் 25 சதவீதம் வரை உயர்த்தப்படும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பு தலைவர் கே.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
வரும் 13ம் தேதி நாமக்கல்லில் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் கூட்டம் நடக்கிறது. அதில் லாரி கட்டணத்தை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 அதிகரிக்கப்பட்டுள்ளதால் லாரி உரிமையாளர்கள் மிக அதிக பாதிப்பை சந்தித்துள்ளனர்.
போக்குவரத்து தொழில் ஏற்கனவே சாலை வரி, உதிரி பாகங்களின் விலை உயர்வு, டயர் விலையில் ஏற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இது போதாது என்றும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்க சாவடிகளும் தங்களது இஷ்டத்துக்கு வரியை உயர்த்தி லாரி உரிமையாளர்களுக்கு பெரும் தலைவலி தருகின்றனர்.
இந்நிலையில் டீசல் விலையும் உயர்ந்திருப்பது நலிவடைந்திருக்கும் லாரி தொழிலை மேலும் மோசமாக்கியுள்ளது. இதனால் லாரி கட்டணத்தை 25 சதவீதம் வரை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும்.
லாரி கட்டணத்தை உயர்த்தினால், அடிப்படை பொருட்களின் விலைவாசியும் உயர்ந்து பொது மக்கள் பெரிதும் அவதிப்படுவார்கள் என்பது தெரியும். ஆனால், எங்களுக்கு வேறு வழியில்லை.
நாங்கள் மத்திய அரசுக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவர்கள் விலை குறைப்பு செய்தால் கட்டணத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் ஏதும் ஏற்படாது என்றார்.