தூக்கு தண்டனை தொடரும்-சுப்ரீம் கோர்ட்
டெல்லி: மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை சாகும் வரை தூக்கில் தொங்க விடும் முறை தொடரும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அசோக்குமார் என்பவர் ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், ஒருவரை தூக்கில் தொங்க விட்டு சாகடிப்பதால் அவருக்கு பெரும் வலி ஏற்பட்டு அந்த வலியுடன் சாக நேரிடுகிறது. அதற்குப் பதிலாக, அமெரிக்காவில் கடைப்பிடிப்பது போல விஷ ஊசி போட்டு அமைதியான முறையில் தண்டனையை நிறைவேற்றலாம் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவைப் பரிசீலித்த நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், மனுதாரரைப் பார்த்து, தூக்கில் தொங்க விடுவதால் வலி ஏற்படும் என்பது எப்படி உங்களுக்குத் தெரியும். அல்லது ஊசி மூலம் கொன்றால் வலிக்காது என்று எப்படி கருத முடியும் என்று கேட்டார்.
அதற்கு மனுதாரர் அசோக் குமார் பதிலளிக்கையில், எனது கோரிக்கையை நீதிமன்றம் தவறாகப் புரிந்து கொண்டுள்ளது. மரண தண்டனையே வேண்டாம் என்று நான் கூறவில்லை. மாறாக, அதை நிறைவேற்றும் முறையில் சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என்றுதான் கோருகிறேன் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், பல நாடுகளில் இன்னும் மரண தண்டனை உள்ளது. பல்வேறு முறைகளில் அதை நிறைவேற்றி வருகிறார்கள். மிக நெருக்கத்தில் வைத்து சுட்டுக் கொல்லும் முறையும் உள்ளது. தூக்கில் தொங்க விட்டும் தண்டனையை நிறைவேற்றுகிறார்கள். மின்சார இருக்கையில் அமர வைத்து கொல்கிறார்கள். விஷ ஊசி போட்டு சாகடிக்கின்றனர்.
இந்தியாவில் மனிதாபிமான சட்டத்திற்குட்பட்ட மிக மிக மென்மையான முறையில்தான் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அதிலும் கூட மிக மிக அரிதான வழக்குகளில் மட்டும்தான் தூக்குத் தண்டனையே விதிக்கப்படுகிறது.
தூக்கில் தொங்க விடுவதால் வலிக்கும் என்று கூறுவதை ஏற்க இயலாது. தூக்குக் கயிறை சரியான முறையில் கழுத்தில் மாட்டி, கீழே உள்ள பலகையை இழுத்தவுடன் கழுத்து எலும்பு முறிபட்டு உடனடியாக மரணம் சம்பவித்து விடுகிறது. இதில் வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.
எனவே விஷஊசி போட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. சாகும் வரை தூக்கிலிடப்பட வேண்டும் என்ற நடைமுறையே தொடர்நது நீடிக்கும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்தியாவில் கடந்த 2004ம் ஆண்டு கடைசியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. 14 வயது பள்ளிச் சிறுமியை மிகக் கொடூரமாக கற்பழித்துக் கொன்ற தனஞ்செய் சாட்டர்ஜி என்பவர் தூக்கிலிப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.