சென்னை வந்த 7 பயணிகளுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி - மருத்துவமனையில் அனுமதி
சென்னை: சென்னைக்கு வந்த 7 விமான பயணிகளுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதால் அனைவரும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரிலிருந்து வந்தவர்கள் இந்த ஏழு பேரும்.
இந்த இரு நாடுகளிலிருந்து வந்த பயணிகளை விமான நிலைய மருத்துவக் குழு பரிசோதித்தது. அப்போது, சென்னை திரும்பிய கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த கதிரேசன் (38), அவரது மனைவி சியாமளா (34) மகன்கள் ஸ்ரீராம் (10), சங்கர் (7) ஆகியோருக்கு காய்ச்சல் இருந்தது தெரிய வந்தது.
பெருங்குடியைச் சேர்ந்த ஜீஸஸ் (41) அவரது மனைவி மரியம் இசபெல்லா (36), அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய திண்டிவனம் கிருஷ்ணசாமி (32) ஆகியோருக்கும் காய்ச்சல் இருந்தது.
இவர்களுக்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் அனைவரும் தண்டையார்ப்பேட்டை தொற்று நோய் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.