பக்லியார் அணையை தகர்க்க லஷ்கர் சதி- தீவிரவாதி கைது
டெல்லி: காஷ்மீரில் உள்ள பக்லியார் அணையை தகர்க்க தாங்கள் திட்டமிட்டதாக இந்திய ராணுவத்திடம் சிக்கிய லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஒருவன் தெரிவித்துள்ளான்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து சுமார் 120 கிமீ., தூரத்தில் இருக்கும் குப்வாரா மாவட்டத்தில் உள்ள செளகிபல் பகுதியில் இந்திய ராணுவத்தினருக்கும், ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுக்கும் இடையில் கடும் சண்டை நிலவியது.
இதில் ராணுவத்தின் 16வது ஜாட் படை இரண்டு தீவிரவாதிகளை பிடித்தது. அவர்களில் ஷப்கத் என்ற தீவிரவாதியிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் இருவரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அந்த தீவிரவாதி மேலும் கூறுகையில்,
எனது பெயர் ஷப்கத். 22 வயதாகிறது. லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்தவர்கள் இந்தியாவில் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம். இதற்காக சுமார் 120 பேருக்கு பாகிஸ்தானின் வசம் இருக்கும் ஆக்ரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் நகரில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நாங்கள் காஷ்மீரில் இருக்கும் பக்லியார் அணையை தகர்க்க வந்தோம். இதன்மூலம் பயங்கர சேதத்தை உண்டு பண்ண முயற்சித்து வருகிறோம். இதற்காக எங்களை போன்ற 15 பேருக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானின் சியல்கோட்டில் இருந்து ஜம்முக்கு சுரங்கம் ஒன்றை அமைக்கும் பணியிலும் எங்கள் இயக்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 4 அடி அகலத்தில் இருக்கும் சுரங்கத்தில் தற்போது 7 அடி நீளம் வரை பணி முடிந்திருக்கிறது.
அந்த சுரங்கம் எங்கு துவங்குகிறது என்பது எனக்கு தெரியாது என்றார்.