முதல்வர் கெளரவம் பார்க்க கூடாது..ராமதாஸ்
திண்டிவனம்: சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ள மருத்துவ மாணவர்களை அழைத்து உடனடியாக முதல் அமைச்சர் கருணாநிதி பேச வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவ கல்லூரிகளுடன் இணைந்த பொது மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்களும், முதுநிலை பட்டப் பயிற்சி மருத்துவர்களும் கடந்த இரண்டு வார காலமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக அரசு பொது மருத்துவமனைகளில் மருத்துவ சேவை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, புறநோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்த நிலை நீடிப்பது பொது நலனுக்கு உகந்தது அல்ல.
போராட்டம் நடத்துகின்ற பயிற்சி மருத்துவர்களின் நிலைப்பாடு மற்றும் அரசின் நிலை ஆகியவற்றை ஆராயும் போது, இடையில் ஒரு மெல்லிய இழை தான் வித்தியாசமாக தெரிகின்றது.
ஆண்டு தோறும் பல்வேறு இலவசங்களுக்கு பல நூறு கோடி ரூபாய்களை செலவு செய்யும் அரசு, பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்பதால் பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தி விடாது.
போராட்டம் நடத்தி வருகிற பயிற்சி மருத்துவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும்.
எனவே, இந்த பிரச்சனையில் தமிழக அரசும், முதல் அமைச்சரும் கெளரவம் பார்க்காமல், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ மாணவர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்து பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.