போலீஸார் மீது எஸ்எம்எஸ் மூலம் புகார் தரலாம்!
சென்னை: போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்ய மறுத்தாலோ, எப்ஐஆர் தர கால தாமதம் செய்தாலோ, வழக்குத் தொடர்பான சொத்துக்களை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க போலீசார் கால தாமதப்படுத்தினாலோ எஸ்.எம்.எஸ். மூலம் புகார் தரலாம் என சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
சென்னை நகரில் போலீசார் மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக 30 செயின் பறிப்பு வழக்குகள் உள்பட 93 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 86 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ. 2.73 கோடி மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதில் 566 பவுன் தங்க நகைகள், 27 வைரக் கற்கள், 7.5 கிலோ வெள்ளிப் பொருட்கள், 18 கார்கள், 9 லேப்டாப்கள், 19 மோட்டார் சைக்கிள், ஒரு ஆட்டோ, 2 கேமராக்கள், 8 செல்போன்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.73.35 லட்சம் ஆகியவை அடங்கும்.
இந்த ஆண்டு சென்னையில் இதுவரை 159 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 60 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
போலீசாரின் எஸ்.எம்.எஸ். புகார் பிரிவுக்கு இதுவரை 2,497 புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மீது நடவடிக்கை உரிய மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்ய மறுத்தாலோ, எப்ஐஆர் தர கால தாமதம் செய்தாலோ, வழக்குத் தொடர்பான சொத்துக்களை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க போலீசார் கால தாமதப்படுத்தினாலோ எஸ்.எம்.எஸ். மூலம் புகார் தரலாம். முதல் தகவல் அறிக்கை மற்றும் சொத்துக்கள் மக்களின் வீடு தேடி வரும்.
சென்னைக்கு தீவிரவாதிகள் மிரட்டல் ஏதும் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பள்ளி மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் மாயமானதாக வரும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான வழக்குகளில் பெண்கள் காதல்வயப்பட்டு வீட்டை விட்டு செல்கின்றனர். அவர்களாகவே திரும்பியும் வந்து விடுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் 18 வயதுக்கு குறைவானவர்கள்.
போலீஸ் நிலையங்களில் வீட்டை விட்டு ஓடி வரும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திருமணத்தில் போலீசாருக்கு உடன்பாடு இல்லை. அதே நேரத்தில் காதல் ஜோடிகளுக்கு திருமணத்துக்கு பின் பாதுகாப்பு கேட்டு புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
புகார் பிரிவுக்கு வரும் காதல் எஸ்எம்எஸ்கள்..
இதற்கிடையே கடந்த 24 நாட்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட போலீஸ் எஸ்எம்எஸ் புகார் பிரிவுக்கு காதல் எஸ்எம்எஸ் எல்லாம் வருகிறதாம்.
நேற்று முன்தினம் அதிகாரி ஒருவரின் பெயரைப் போட்டு “ஐ லவ் யூ" என்ற எஸ்எம்எஸ் வந்து போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது குறித்து போலீசார் விசாரித்தபோது அது ஒரு கல்லூரி மாணவியின் குறும்பு என்று தெரியவந்ததாம்.












Click it and Unblock the Notifications